Skip to main content

'ஒரு நாளைக்கு 83 ரூபாயை வைத்து எந்த அமைச்சர் சமாளிப்பார்?'-கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் கேள்வி!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020
Which minister will cope with 83 rupees a day?' - Communist MP Subramanian question

 

தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 66,130 பேர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மைப் காவலர்களாக பணி செய்கின்றனர். இவர்களது ஊதியத்தை மாதம் 2,600 ரூபாயிலிருந்து 3,600 ரூபாயாகவும் டேங்க் ஆப்பரேட்டர் ஊதியம் 2,600 ரூபாயிலிருந்து 4 ஆயிரமாகவும், உயர்த்தி சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டும் இன்று வரை அந்த உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை.

இதை அமல்படுத்தக்கோரி கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 28ந் தேதி புதன் கிழமையன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என்று அச்சங்கம் அறிவிப்பு செய்திருந்தது. இதை கைவிடக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ கவிதா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் 28ந் தேதி திட்டமிட்டபடி  காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஏ.ஐ.டி.யூ.சி மாநில தலைவரும், திருப்பூர் எம்பியுமான சுப்பராயன் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. சங்கத்தின் துணை தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். இதில் ஈரோடு ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி, திமுக மாநகரச் செயலாளர் சுப்பிரமணி,  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொறுப்பாளர் சுப்பு, குணசேகரன் மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் 500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரிகளிடம்  மனு கொடுத்தனர். முன்னதாக திருப்பூர் சுப்பராயன் செய்தியாளர்களிடம் பேசும்போது,

 

Which minister will cope with 83 rupees a day?' - Communist MP Subramanian question



தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 527 ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களது ஒரு நாள் சம்பளம் 83 ரூபாய்தான். இதை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும். இந்த 83 ரூபாய்யை வைத்து அமைச்சர்களால் ஒரு நாளை சமாளிக்க முடியுமா? தூய்மை பாதுகாவலர்கள் சுடுகாட்டு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். நமது ஈரோடு மாவட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் பணி புரிகின்றனர். தமிழக சட்டசபையில் இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உயர்த்தி அறிவித்தனர். அந்த அறிவிப்பு என்னவாச்சு. உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் இதற்கான அரசாணையை அரசு வெளியிட வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட போராட்டங்கள் நடைபெறும். இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.