Skip to main content

கான்கிரீட் போடுவதா? இரு பிரிவாக மோதிக்கொள்ளும் விவசாயிகள்...!

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

erode villagers have mixed reactions on river construction

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையிலிருந்து விவசாயம், கால்நடை பயன்பாடுகள், மக்களின் குடிநீர்த் தேவைகளுக்காக வெளியேற்றப்படும் தண்ணீர் கீழ்பவானி வாய்க்கால் மூலமாக மற்ற பகுதிகளுக்கு வருகிறது. சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் விவசாய நிலம் இந்த கீழ்பவானி வாய்க்காலால் விவசாய பூமியாக உள்ளது. வாய்க்கால் முழுமையான தூரத்திற்கும் இருபுறமும் மண் கரைகள் தான். 60 வருடங்களாக இப்படித்தான் கீழ்பவானி வாய்க்காலில் நீர் ஓடுகிறது. 

 

அப்படிப்பட்ட இந்த வாய்க்காலில் நவீன சீரமைப்பு என்ற பெயரில் 709 கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் தளம், கான்கிரீட் சுவர் எழுப்பும் பணிக்கான ஆயத்த பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. கான்கிரீட் தளம், சுவர் அமைந்தால் கடைமடைப் பகுதிவரை தண்ணீர் வீணாகாமல் செல்லும் என்று இத்திட்டத்திற்கு ஒரு தரப்பு விவசாய சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தாலும், கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீராதாரம் பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என மற்றொரு தரப்பு விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், கசிவு நீர்ப் பாசனத்தில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப்படும் என்பதாலும் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

 

இதனால் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் அப்படியே உள்ளது. இந்நிலையில், இருதரப்பு விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் முத்துசாமி முடிவு செய்து, கடந்த வாரம் திட்டம் வேண்டாம் என்று கூறிய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, இன்று இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த அமைச்சர் முத்துசாமி முடிவு செய்து, அதற்காக ஏற்கனவே அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

 

இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அமைச்சர் முத்துசாமி, கீழ்பவானி ஆயக்கட்டு பாசனதாரர்கள் சங்க பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

 

அப்போது சங்கத்தின் தலைவர் பெரியசாமி தலைமையில் விவசாயிகள் அமைச்சர் முத்துசாமியிடம், "கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும் என ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த மே மாதம் 9-ந் தேதி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தோம். அப்போது செயற்பொறியாளர் மே 15ஆம் தேதி அனைத்து வேலைகளும் தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால், தற்போது வரை வேலைகள் தொடங்கப்படவில்லை. 

 

கீழ்பவானி வாய்க்கால் மிகப் பலவீனமடைந்து தண்ணீர் செலுத்தும் திறனை இழந்துவிட்டது என 10 ஆண்டுகளுக்கு முந்தைய நீரியல் வல்லுநர் மோகனகிருஷ்ணன் அறிக்கை தெரிவிக்கிறது. அதைத் தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. மோகனகிருஷ்ணன் பரிந்துரையை ஏற்று கீழ்பவானி கால்வாயைச் சீரமைத்து வலுப்படுத்தத் தமிழக அரசு நபார்டு வங்கி மூலம் ரூபாய் 709 கோடி மதிப்பில் ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் பணிகள் தடைப்பட்டுள்ளது. 

 

சென்ற ஆண்டு கால்வாயில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பல முறை தண்ணீர் நிறுத்தப்பட்டு விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளானார்கள். இந்த ஆண்டும் அதே போல் ஏப்ரல் 30ஆம் தேதி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. 19 நாட்கள் கடந்த நிலையிலும் நீர்வளத்துறை திட்டவட்டமான முடிவுகளை எடுத்து சீரமைப்பு வேலைகளைத் தொடங்காமல் இருக்கின்றது. இதன் காரணமாக கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இங்கு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர். 

 

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த சில பிரதிநிதிகளும் இந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர். அமைச்சர் முத்துசாமி விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில்,  அவர்களும் தங்கள் தரப்பு கருத்துக்களைக் கூற முயன்றனர். அதற்கு அனுமதி கிடைக்காததால் சில விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் எதிர்த் தரப்பைச் சேர்ந்த விவசாயிகள் அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

 

இதுகுறித்து விவசாயி விஜயகுமார் என்பவர் கூறும்போது, "கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் கான்கிரீட் தளம், சுவர் அமைக்கக் கூடாது என்று ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கூறி வருகிறோம். இங்கு இந்த திட்டம் அமைந்தால் நிலத்தடி நீர் முழுமையாகப் பாதிக்கப்படும். குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும். சிப்காட் தொழிற்சாலை கழிவு நீர் உள்ளே வர வாய்ப்புள்ளது. கான்கிரீட் போட்டால் வாய்க்கால் கசிவு நீர் முற்றிலும் தடைப்பட்டு அதனை நம்பியுள்ள விவசாயிகள் பாசனம் பெறுவது கடினம் ஆகிவிடும். கீழ்பவானி கால்வாய் 60 வருடங்களாக உள்ளது. இந்த பாசனப் பகுதியில் பல்வேறு இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பாசனப் பகுதிகள் அனைத்தையும் முறையாகத் தூர்வார வேண்டும்." என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது