Skip to main content

கூட்டு சேர்ந்து ஏமாற்றிய இளம்பெண்; இளைஞர் பரபரப்பு புகார்!

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

erode veerappan sathiram husband and wife related incident

 

முதல் திருமணத்தை மறைத்து மோசடி செய்ததாக இளம்பெண் மீது ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

 

ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு இன்று வீரப்பன்சத்திரம் பாவேந்தர் வீதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 33) தனது பெற்றோருடன் வந்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, "நான் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு பிரிவின் தலைவராக பணியாற்றி வருகிறேன். எனக்கு ஈரோட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவரை நான்கு வருடமாகத் தெரியும். எனக்கு வீட்டில் திருமணத்திற்கு வரன் தேடி வந்தார்கள். இது அந்த ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கும் நன்கு தெரியும்.

 

இந்நிலையில் அந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் தனக்கு பவானியை சேர்ந்த ஒரு பெண் நன்றாக தெரியும் என்றும் தனது அலுவலகத்தில் அவர் வேலை பார்த்து வருகிறார் என்றும் மிகவும் ஒழுக்கமான பெண் என்றும் அவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று என்னிடம் கேட்டார். எனவே அவர் கூறியபடி அந்த பெண்ணை பார்த்து பெற்றோர் முன்னிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி அவல்பூந்துறை பாகம்பிரியான் உடனமர் புவனேஸ்வரர் கோவிலில் திருமணம் நடந்தது.

 

திருமணத்தின் போது எனது மனைவிக்கு தங்கத் தாலிக் கொடி 15 பவுன், தங்க வளையல் ஒரு ஜோடி, தங்க கம்மல் ஒரு ஜோடி என ஆகமொத்தம் 20 பவுன் தங்க நகைகளை சீதனமாக கொடுத்தேன். மேலும் திருமணச் செலவாக  7 லட்ச ரூபாய் செலவு செய்தேன். திருமணம் முடிந்து இரண்டு மாதம் நன்றாக குடும்ப வாழ்க்கை சென்றது. இந்நிலையில் என் மனைவி செல்போனில் யாருடனோ பேசி வந்தார். நான் இது குறித்து கேட்டபோது என் மனைவி ஏதேதோ கூறி சமாளித்தார். எனக்கு மேலும் சந்தேகம் வரவே எனது மனைவி செல்போன் எண்ணை பார்த்தபோது எனக்கு திருமணம் செய்து வைத்த ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் எனது மனைவி ஆபாசமாகப் பேசியது பதிவாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

 

மேலும் அவருடன் என் மனைவிக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதும் தெரிந்து கொண்டேன். பின்னர் அவர்கள் செல்போனில் பதிவாகி இருக்கும் பதிவுகள் குறித்து  கேட்டபோது எனது மனைவிக்கு ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் ஆகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் என் மனைவி நடத்தை சரியில்லாததால் அவரது முதல் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இந்த உண்மையை மறைத்து தான் அந்த ரியல் எஸ்டேட் அதிபர் எனக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

 

இது குறித்து அவரிடம் கேட்டபோது நாங்கள் அப்படித்தான் இருப்போம் என்று எனது மனைவியும் ரியல் எஸ்டேட் அதிபரும் கூறினர். இதற்கு என் மனைவியின் தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி எனது மனைவி அவரது தாயாருடன் நான் திருமணத்தில் போட்ட தங்க நகைகளோடு சென்றுவிட்டார். பின்னர் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதி நான் சக்தி ரோட்டில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு எனது மனைவி, ரியல் எஸ்டேட் அதிபர் இருவரும் வந்து என்னிடம் தகராறு செய்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். நாங்கள் அப்படித்தான் பணம் பறிப்போம் என்றும் கூறிச் சென்றனர். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை மோசடி செய்து நம்ப வைத்து ஏமாற்றிய ரியல் எஸ்டேட் அதிபர், எனது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருமணத்திற்காக நான் கொடுத்த 20 பவுன் தங்க நகைகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்