Skip to main content

நல்ல திட்டம் மற்ற மாவட்ட போலீஸாரும் கடைபிடிக்கலாமே...?

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

வேகாத வெயில் அடித்தாலும் நடுரோட்டில் நின்று பணியை செய்வது போக்குவரத்து காவலர்கள்தான்.  இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட வெப்பம் கூடுதலாகி கொண்டே வருகிறது. அப்படி வெயிலில் நின்று பணி செய்யும் போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை என்ன செய்கிறது என்பதை விளக்குகிறது இந்த செய்தி. 

 

Erode traffic police

 



ஈரோடு மாவட்டக் காவல்துறை மற்றும் தனியார் அமைப்பு ஒன்று இணைந்து சென்ற சில ஆண்டுகளாக கோடைக்காலத்தில் போக்குவரத்தினை சீர்படுத்திடும் போக்குவரத்துக் காவலர்களுக்கு ஒவ்வொரு நாளும் நீர், மோர் மற்றும் எலுமிச்சப் பழச்சாறு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது ஈரோடு மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் ஈரோடு, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம், அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் என  நகரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திடும் பணியில் ஈடுபட்டுவரும் சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் கடும் வெப்பத்தை சமாளித்து பணியாற்றிடும் வகையிலிலும், அவர்கள் தாகத்தை தணித்திடும் வகையிலும் ஒவ்வொரு நாளும்  பழச்சாறுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் காவலர்களுக்கு  நீர், மோர் மற்றும் எலுமிச்சப் பழச்சாறுகள் வழங்கும் திட்டத்தை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை சிக்னலில் தொடங்கி வைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன். பின்னர் "கடும் வெயில் என்றும் பாராமல் பணியாற்றிடும் போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்ட காவலர்களின் பணிக்கு உரிய மரியாதை செலுத்திடும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வெயில்காலம் முடிவடையும்வரை நாள்தோறும் தவறாமல்  நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் நீர், மோர், பழச்சாறு காவலர்களுக்கு கொடுக்கப்படும்" என தெரிவித்தார். நல்ல திட்டம் இதை மற்ற மாவட்ட காவல்துறையினரும் கடைபிடிக்கலாமே என்கின்றனர் ஈரோடு மக்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.