Skip to main content

திருமகன் ஈவெரா சாலையின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்த அமைச்சர்

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

erode thirumagan evera road name board inauguration function

 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென மரணம் அடைந்தார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார். இதனைத் தொடர்ந்து திருமகன் ஈவெரா நினைவாக அவர் வசித்து வந்த கச்சேரி சாலையை திருமகன் ஈவெரா சாலை எனப் பெயர் மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று திருமகன் ஈவெரா சாலை பெயர்ப் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி எம்.பி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு திருமகன் ஈவெரா சாலை பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். பின்னர் திருமகன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. பேசும்போது, "நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் துக்கம் வருகிறதா மகிழ்ச்சி தருகிறதா என்று சொல்ல தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் எனது மகனை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த சாலைக்கு எனது மகனின் பெயர் வைக்க காரணம் அமைச்சர் முத்துசாமி தான். முதலமைச்சரை பொறுத்தவரை அவரை எதிர்ப்பவராக இருந்தாலும் கூட அவருக்கு மரியாதை கொடுப்பதில் சிறந்தவர். இந்த நேரத்தில் முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் காலத்தில் நானும் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்றார்.

 

நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி பேசினார். அப்போது அவர் கூறும்போது," திருமகனுக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டவுடன் இளங்கோவன் எனக்கு ஃபோனில் தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை கூறினார். இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். அந்த சமயத்தில் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடந்தது. திருமகன் இறந்த செய்தியை நான் முதல்வரிடம் தெரிவித்தேன். அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அன்று இரவே ஈரோட்டுக்கு கிளம்பி வந்து இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் மறுநாள் முதலமைச்சர், திருமகன் நினைவாக நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று என்னிடம் கூறினார். நான் உடனடியாக அவர் வசித்து வந்த கச்சேரி சாலையை திருமகன் ஈவெரா சாலை என பெயர் மாற்றலாம் என்று கூறினேன். அதற்கு முதலமைச்சர் உடனடியாக ஒப்புதல் வழங்கினார். சட்டமன்றத்தில் திருமகன் நடவடிக்கையை முதலமைச்சர் உன்னிப்பாக கவனிப்பார். திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணியை அவரது தந்தை இளங்கோவன் செய்து முடிப்பார்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.