Skip to main content

முகவரி கேட்பது போல் நடித்து செல்போன் பறிப்பு; சிறுவன் உட்பட மூவர் கைது 

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

 erode thindal kadaparai cell phone incident child involved

 

ஈரோடு திண்டல் காரப்பாறை மெடிக்கல் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன்(வயது39). மருந்து விற்பனை பிரதிநிதியான இவர் சம்பவத்தன்று இரவு ரங்கம்பாளையத்திலிருந்து திண்டல் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு ஸ்மார்ட் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடம் முகவரி கேட்டனர். ராஜசேகரன் முகவரியை அவர்களிடம் கூறிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் நடுவில் அமர்ந்த நபர் திடீரென ராஜசேகரன் கையில் வைத்திருந்த ஸ்மார்ட் ஃபோனை பறித்துக்கொண்டார்.

 

இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜசேகரன், மோட்டார் சைக்கிளில் அவர்களைப் பின் தொடர்ந்தார். ராஜசேகரனுக்கு உதவியாக அந்த வழியாக வந்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர். பெருந்துறை சாலையில் இருந்து காரப்பாறை பிரிவு சாலையில் திரும்பும் போது செல்போன் பறித்துச் சென்ற 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை ராஜசேகரன் மற்றும் அவருக்கு உதவிக்கு வந்த 2 பேர் வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களை ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

விசாரணையில் அவர்கள் பெருந்துறை, பழைய பாளையம், எல்லீஸ் பேட்டை, இரட்டை வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா (23), காங்கேயம் சிவன்மலை அடிவாரம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் எனத் தெரிய வந்தது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 15 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் ஃபோனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கிருஷ்ணா மற்றும் சூரிய பிரகாஷ் இருவரும் ஈரோடு கிளை சிறையிலும், 17 வயது சிறுவன் கோவையில் உள்ள சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.