Skip to main content

மானம் காக்கும் ஆடைகளை நம்பி பல லட்சம் வயிறுகள்....!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

Erode textile market

 

கொடிய கரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு, பொது முடக்கம், போக்குவரத்துத் தடை என மக்களின் அன்றாட வாழ்வே அல்லலுக்கும், அவஸ்தைக்கும் உள்ளானது. இதன் பெரும் பாதிப்பைச் சந்தித்தது தொழில் துறைதான்.

 

தென்னிந்தியாவின் புகழ் பெற்ற ஜவுளிச்சந்தை இப்போது சவக்களைப் படிந்த முகமாகக் காட்சியளிக்கிறது. ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் என பல மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் ஒருசேர அதன் விற்பனை கேந்திரமாக இருப்பது ஈரோடு மாநகர் தான். இங்கு நடைபெறும் ஜவுளிச் சந்தையான கனிமார்க்கெட் என்பது உலகப் புகழ் பெற்றது. வாரந்தோறும் ஒவ்வொரு திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை, இரு நாட்கள் நடைபெறும் இந்தச் சந்தையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வேறு மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானவிலிருந்தும் வெளி மாநில மொத்த வியாபாரிகள் அதிகளவில் வந்து ஜவுளி ரகங்களை மொத்தமாகவும் சில்லறை விலையிலும் கொள்முதல் செய்வார்கள்.

 

இங்கு விற்கப்படும் ஜவுளிகள் மற்ற இடங்களைக் காட்டிலும் தரமாகவும் விலை குறைவாகவும் இருப்பதால் இங்கு அதிக அளவு மக்கள் கூட்டம் இருக்கும். மேலும் அந்தந்த கால நிலைக்கேற்பவும் ஜவுளி விற்பனை செய்யப்படுவது தனிச் சிறப்பாகும். கோடை காலங்களில் காட்டன் ஆடைகள், லுங்கி, வேஷ்டி சேலை, கைக்குட்டை போன்ற ரகங்கள், குளிர்காலத்தில் போர்வை, ஜமக்காளம் போன்றவையும் கோயில் பண்டிகை காலங்களில் பக்தர்களுக்குத் தேவையான மஞ்சள் நிற சேலை, வேஷ்டி, துண்டு போன்ற ராகங்களும் விற்பனை செய்யப்படும். ஒரு நாள் இரவு, பகல் என நடைபெறும் இந்த ஜவுளிச் சந்தையில் சர்வ சாதாரணமாக ஐந்து கோடி முதல் எட்டு கோடி ரூபாய் வரை விற்பனையாகும்.

 

தீபாவளி, தைப்பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பத்து கோடி வரை விற்பனையாகும். ஆனால் இந்த கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சென்ற மார்ச் மாதத்திலிருந்து இந்த ஜவுளி சந்தைக்கு வியாபாரிகள் வருகையே இல்லை. காரணம் வெளிமாவட்ட வெளிமாநில வியாபாரிகள் வருவதற்குத் தடை உள்ளதால் ஈரோடு ஜவுளிச் சந்தை சுத்தமாகக் களையிழந்து விட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்களின் வருகையும் மிகக் குறைவாக இருப்பதால் பெரும்பாலும் ஜவுளிச் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.

 

கரோனா பெயரில் வந்த இந்தத் தடையால் இதுவரை ஜவுளிச் சந்தையில் மட்டும் ரூபாய் 150 கோடி ரூபாய் வர்த்தகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாக வியாபாரிகள் கவலையோடு கண்ணீர் வடிக்கிறார்கள்.

 

Erode textile market

 

இது சம்பந்தமாக ஜவுளிச் சந்தை வியாபாரிகள் கூறும்போது,

 

'இந்தப் புகழ் பெற்ற ஜவுளிச் சந்தைக்கு வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு வாரமும் வியாபாரிகள் வருகை தருவார்கள். ஆனால் தற்போது வட மாநிலங்கள் மற்றும் பிற மாவட்ட வியாபாரிகள் வரத்து இல்லை. அதற்குக் காரணம் மத்திய, மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்து மற்றும் ரயில் பயணத்தைத் தடை செய்துள்ளதுதான்.

 

http://onelink.to/nknapp

 

மேலும் பொதுமக்களிடம் இப்போது சுத்தமாகப் பணப்புழக்கம் குறைந்துவிட்டது என்பது கண்கூடாகத் தெரிகிறது. இதனால் எதிர்பார்த்த வியாபாரமும் நடைபெறுவதில்லை இனிவரும் காலங்கள் பண்டிகை, திருவிழா காலங்கள் என்பதால் வியாபாரம் இனியாவது சூடுபிடிக்குமா? அல்லது இதே போல் மந்த நிலையே தொடருமா என ஒன்றும் தெரியவில்லை. ஏற்கனவே இந்தக் கரோனா பீதியால் மூன்று மாதம் முழுமையாக இந்த ஜவுளிக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. பின்னர் இந்த மாதம் தான் திறக்கப்பட்டன, என்றாலும் எதிர்பார்த்தபடி வியாபாரம் என்பது தற்போது வரை நடக்கவே இல்லை. இதற்கெல்லாம் மிக முக்கியக் காரணம் பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை என்பதுதான். பேருந்து, ரயில் போக்குவரத்து மீண்டும் இயங்கினால் தான் ஜவுளி விற்பனை நடைபெற தொடங்கும். ஆனாலும் பழையபடி வியாபாரம் நடப்பதற்கும் விற்பனையில் இயல்பு நிலை திரும்புவதற்கும் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகலாம், தொழிற்சாலை உரிமையாளர், உற்பத்தி செய்கிற தொழிலாளர்கள், விற்பனை செய்கிற வியாபாரிகள், இத்தொழில் சார்ந்து வாழும் பல லட்சக்கனக்கான குடும்பங்கள் தேங்கிக் கிடக்கும் இந்த ஜவுளி ரகங்களைப் பார்த்து கண்ணீர் விடுவது எப்போது நிற்க்குமோ?" என வேதனையோடு பேசுகிறார்கள்.

 

மானம் காக்கும் இந்த ஆடைகளை நம்பி பல லட்சம் வயிறுகள் வாடிக் கொன்டிருப்பதை அரசுகள் உணர வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.