Skip to main content

திருவாச்சி கரியமாணிக்கப் பெருமாள் கோவில் நிலத்தை விற்பதற்கு தடை கோரிய வழக்கு!- அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

 

erode temple land chennai high court

 

 

ஈரோடு மாவட்டம், திருவாச்சியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான கரியமாணிக்கப் பெருமாள் கோவிலின் நிலத்தை விற்பதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள திருவாச்சியில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமா 500 ஆண்டுகள் பழமையான கரியமாணிக்கப் பெருமாள் கோவிலின் 4.59 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை விற்க, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இந்து சமய அறநிலையத்துறை விதிகளை மீறி, பொதுநலன் என்ற பெயரில், இந்து சமய அறநிலையத்துறை 'வேலியே பயிரை மேய்வது' போல், கோவில் நிலம் விற்கப்படுவதாகக் கூறி, அதற்குத் தடை விதிக்கக் கோரி, திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்திருந்தார். 

 

அந்த மனுவில், சம்மந்தப்பட்ட கோவிலின் அறங்காவலர் மட்டுமே, அக்கோவிலின் நிலத்தை விற்பது தொடர்பாக முடிவெடுக்க முடியும் என விதி உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக அறங்காவலராக இல்லாதவர், அக்கோவில் நிலத்தை விற்பது தவறு. சந்தை மதிப்பில் 1.21 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை 12 லட்சம் ரூபாய்க்கு விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

 

நிலத்தை விற்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்துக்கு தடை விதிக்கவும், நிலத்தை விற்க அனுமதித்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும் தொடரப்பட்ட  இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ண குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இதையடுத்து, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.