Skip to main content

சீனாவிலிருந்து திரும்பிய ஈரோடு மாணவருக்கு கொரோனா வைரஸா...?

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

உலக அளவில் மருத்துவம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் புதிது புதிதாக நோய் கிருமிகள் உருவாகி மனித குலத்திற்கு சவால் விட்டு வருகிறது. அப்படித்தான் இந்த கொரோனா வைரஸ்சும் சீனாவில் தொடங்கி இன்று உலக நாடுகள் பலவற்றை அச்சுருத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் தாக்கி இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் சீனாவில் பரிதாபமாக இறந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் இப்போதும் அபாய கட்டத்தில் உள்ளார்கள். சீனாவுக்கு படிக்க, தொழில் நியமித்தமாக சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்தால் கொரோனாவுடன் வந்து விட்டார்களோ என்ற பீதி உள்ளது.

 

Erode student - corona virus issue

 



ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் சென்ற ஐந்து ஆண்டுகளாக சீனாவில் உள்ள பல்கலைக்கழகமான சின்ஜியங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி சீனாவிலிருந்து பெருந்துறைக்கு அந்த மாணவர் திரும்பினார். அப்போது அவருக்கு காய்சல் அறிகுறி இல்லை. தனது  வீட்டில் இருந்து வந்த அவருக்கு  திடீரென சளி,  காய்ச்சல் அதிகமானது.  இதனால் கொரோனா வைரஸ்  தாக்கி இருக்குமோ என்ற பயம் ஏற்பட்டது. 

சந்தேகத்தின்பேரில் அவர் பெருந்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு   சிகிச்சைக்காக சென்றார்.  இதனை தொடர்ந்து டாக்டர்கள் அவரின்  ரத்த மாதிரிகளை எடுத்து அதை சென்னையில் உள்ள கொரோனா  வைரஸ் தனி செல்லுக்கு அனுப்பியதோடு, அந்த சோதனை முடிவு தெரியும் வரை அவர் மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் இருக்க வேண்டுமென மருத்துவமனை  நிர்வாகம் கூறியிருந்தது. அவரும் சில நாட்கள் தனி வார்டில் இருந்தார்.

 



இந்நிலையில் நேற்று மாலை திடீரென அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் பீதியடைந்த அந்த மாணவன் வீட்டிற்கு சென்ற மருத்துவர்களிடம் எனக்கு எந்த வைரசும் தொற்றவில்லை. நான் நலமாக உள்ளேன் மருத்துவமனை தனி வார்டில் இருப்பது ஜெயில் போல இருக்கிறது என கூறியிருக்கிறார். பிறகு மருத்துவர்கள்  சென்னைக்கு அனுப்பிய உங்களின் ரத்தப் பரிசோதனை முடிவு தெரியும்வரை உங்கள் வீட்டிலாவது தனி அறையில் இருப்பது நல்லது என கூறி விட்டு வந்துள்ளனர். இருப்பினும் ஒரு நாளைக்கு ஐந்து முறை மருத்துவர்கள் மாஸ்க்கட்டிய படி அந்த மாணவன் வீட்டுக்குச் சென்று விசாரித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட மாணவனோ எந்த மாஸ்க்கும் கட்டாமல் வீட்டுக்கு வரும் மருத்துவர்களை நலம் விசாரிக்கிறார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.