Skip to main content

ஈரோட்டில் போலீஸ் தனி ராஜ்ஜியம்...! - விவசாய அமைப்பு கண்டன குரல்

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

"ஈரோடு மாவட்ட காவல்துறை ஏதோ தனி அதிகார வரம்பு உள்ளதுபோல சர்வாதிகார போக்கை தொடர்ந்து கடைபிடிக்கிறது. இங்கு புதிதாய் வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேசன் மக்கள் சார்ந்து இயங்கும், ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளோரையும் பிரிவினைவாதி போல நடத்துகிறார்" என ஈரோடு போலீசாரை கண்டித்து நம்மிடம் பேசினார் தமிழக தற்சார்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளரான கி.வே.பொன்னையன்.
 

 

farmer


அவர் மேலும் கூறும்போது "இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதத்தைக் கண்டிக்கவும், உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தவும், உறவுகளுக்கு ஆறுதல் கூறவும் ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில், 25ந் தேதி, வியாழன் மாலை பெரியார் மன்றத்தில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டம்
நேற்றே ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் சர்ச் முன்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், ஈரோடு காவல்துறை தேர்தல் விதியை காரணம் காட்டி இறுதி நேரத்தில் இரங்கல் கூட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டது. தேர்தலே முடிந்துவிட்டது தேர்தல் நடத்தை விதிகளுக்கு, கோயில் திருவிழாக்களும், மரண நிகழ்ச்சிகளும் விதிவிலக்காக இருக்கும்போது, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இது போன்ற கூட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இலங்கையில் அநியாயமாக உயிர் பறிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் ஈரோட்டில் இரங்கல் தெரிவித்தால், இந்த போலீசுக்கு என்ன இடையூறு. இதில் என்ன சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று தெரியவில்லை. 


சரி, அதையும் ஏற்றுக் கொள்வோம் பொது இடத்தில்தான் அனுமதிக்கவில்லை. ஆனால், திராவிடர் கழக கட்டிடமான பெரியார் மன்றத்துக்குள் நடத்திக் கொள்கிறோம் என்று கேட்டோம். அதற்கும் போலீஸ், ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்தது ஒரு நாள் நடத்த முடியாமல் பின்பு, நாளைக்கு நடத்துங்கள் என்று சொன்னார்கள். இவ்வளவையும் தாண்டி, இன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது.


போலீஸ் கெடுபிடிகள் புதிதல்ல; ஏற்கெனவே தேசப்பிதா மகாத்மா காந்தி படுகொலை 70-ஆம் ஆண்டு நிகழ்ச்சியை இதே அரங்கத்துக்குள் நடத்தக்கூடாது என்று தடை விதித்ததும் இந்த ஈரோடு போலீஸ்தான்.
 

ஈரோடு மாவட்டத்தில் ஜனநாயகம் இருக்கிறதா? இல்லை, போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறதா? தமிழ்நாட்டுக்கு ஒரேசட்டம்தான் இருக்கிறதா? இல்லை, ஈரோட்டுக்கு மட்டும் தனிச்சட்டம் இருக்கிறதா? மக்கள் சார்ந்த இயக்கங்கள் மீது ஈரோடு போலீசார் கெடுபிடிகள் தொடர்ந்தால் மக்களை திரட்டி போராடுவதோடு ஈரோடு போலீசின் சர்வாதிகார போக்கை நீதிமன்றம் வரை கொண்டு செல்வோம்" என்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.