Skip to main content

சஸ்பெண்டான ஏட்டு வீட்டில் சோதனை! -ஈரோடு போலீஸ் அதிர்ச்சி..! 

Published on 26/01/2021 | Edited on 26/01/2021
ttttt


ஈரோடு மாவட்ட தனிப்பிரிவு தலைமை காவலரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வரும் சோதனையின் கரணமாக அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

 

ஈரோடு பழையபாளையம் ஓடைமேடு பகுதியில் வசித்து வருபவர் வேல்குமார். இவர், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேல்குமாரை கடந்த ஒரு மாத காலமாக ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில், ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் போலீசார் தனிப்பிரிவு தலைமை காவலர் வேல்குமார் வீட்டில் கடந்த 22ந் தேதி   அவர் வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். 

 

இதில், வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், அசையா சொத்துக்களின் ஆவணங்கள், வங்கி பாஸ்புக், செக்புக் போன்றவற்றை கைப்பற்றினர். மேலும், வேல்குமார் வங்கியில் டெபாசிட் செய்த பணம், லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நகைகளின் மதிப்பு குறித்து வேல்குமாரிடமும், வேல்குமாரின் மனைவியிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வேல்குமார் பணம், நகை ஏதேனும் பதுக்கி வைத்துள்ளரா? என வீட்டின் அனைத்து பகுதிகளிலும் அங்குலம், அங்குலமாக போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் வேல்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது மட்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்த போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

 

இந்நிலையில் அவர்மீது வழக்கு  பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை அலுவலகத்திற்கு வரவழைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புதுறையினர் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருவதன் காரணமாக தனிப்பிரிவு தலைமை காவலர் வேல்குமாரை பணியிடைநீக்கம் செய்வதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை 25 ந் தேதி  உத்தரவிட்டுள்ளார். 

 

சஸ்பெண்டான ஏட்டு வேல்குமாரிடம் ஒரு டைரியும் அவரது செல்போனையும் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது டைரியில் பல அதிர்ச்சி தகவல்கள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.