ADVERTISEMENT

ஓடு... ஓடு... துரத்து... துரத்து... ஐயோ... போலீசுக்கு தண்ணிக்காட்டி எஸ்கேப்பான திருடன்!

10:52 AM Nov 16, 2019 | santhoshkumar

ஈரோடு போலீசாரை ஓடு.. ஓடு என ஓட வைத்து இறுதியில் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பியோடி விட்டான் ஒரு கொள்ளையன். சினிமாவில் வருவதுபோல் அந்த சேஸிங் நடந்துள்ளது என்பது தான் சுவாரஸ்யம்....

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக திருட்டு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை, பெண்களை குறிவைத்து தாலி கொடி செயின் அறுப்பு என க்ரைம் ரேட் எகிற இந்த குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டண்ட் சக்திகணேசன் உத்தரவின் பேரில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஈரோடு போலீசாருக்கு நேற்று இரவு வாக்கி டாக்கி மூலம் ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஊட்டியில் இருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணை கொண்ட லாரி திருடப்பட்டு, அதனை கொள்ளையன் ஒருவன் ஓட்டி வருவதாகத்தான் அந்த தகவல்.

எனவே, மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இந்நிலையில் அந்த குறிப்பிட்ட லாரி அம்மாபேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளது. லாரியை ஓட்டி வந்தவர் மிகவும் தாராளமாக ரூ.15 ஆயிரத்துக்கு டீசல் அடி என கூற, பெட்ரோல் பங்க் ஊழியர் ஆச்சரியத்தோடு 15 ஆயிரத்துக்கு டீசல் அடித்திருக்கிறார். லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு, பில் தருவதாக கூறிய திருடன் திடீரென லாரியை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பங்க் மேலாளர் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அம்மாபேட்டை போலீஸார் அந்த லாரியை பிடிக்க ஜீப்பில் துரத்தினர். ஆனால் அதற்குள் அந்த லாரி பவானியை தாண்டியது. பவானி போலீசார் இரண்டு இரு சக்கர வாகனத்தில் துரத்த அடுத்து அந்த லாரி ஈரோடு நோக்கி சென்று விட்டது. உடனே ஈரோடு போலீசாருக்கு தகவல் செல்ல அந்த திருட்டு லாரி சர்வீஸ் ரோடு வழியாக ஈரோடு வ. உ .சி .பூங்கா வழியாக வந்து கொண்டிருந்தது. இதையடுத்து ஈரோடு டவுன் போலீஸார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டனர். ஆனால் போலீசை பார்த்ததும் அந்த நபர் லாரியை வலது புறம் திருப்பிக் கொண்டு வேகமாக சென்றார்.

மீண்டும் போலீசார் ஜீப் மற்றும் டூவீலர்களில் விரட்டோ விரட்டு என விரட்டிச் சென்றனர். ஆனாலும் சளைக்காத திருடன் அந்த லாரியை வேகமெடுத்துச் சென்றான். ஈரோடு லோட்டஸ் மருத்துவமனை அருகே உள்ள ரவுண்டானா அருகில் லாரி வரும்போது அங்கு உஷராக இருந்த போலீசார் பேரிங் போர்டு போட்டு வைத்து சாலையை வழிமறித்தனர். இதனால் லாரியை ஓட்டி வந்த திருடன் இதற்கு மேல் போலீசை விரட்டி பயனில்லை என முடிவு செய்து லாரியை டக்கென அங்கு நிறுத்திவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டார்.

வேர்க்க விறு விறுக்க அங்கு வந்த போலீசார் நின்ற லாரியைதான் மீட்டனர். போலீசை சுமார் 50 கிலோ மீட்டர் ஓட வைத்து தன்னிகாட்டி விட்டு எளிமையாக தப்பிய திருடனை இனி தேடித்தான் பிடிக்க வேண்டும். பிறகு இதுகுறித்து ஈரோடு போலீசார் ஊட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஊட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈரோடு வந்து லாரியை மீட்டு சென்றார்.

எப்படியோ சினிமா காட்சி போல திருட்டு லாரியை விரட்டி மடக்கி பிடித்த சம்பவம் பெரும் போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரியை பிடிக்க உறுதுணையாய் இருந்த, அதாவது லாரி திருடனால் துரத்தி வேர்க்க வைத்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பாராட்டி வாழ்த்தினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT