மதுபோதையில் பட்டாசு வெடித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். மேலும் மக்கள் காலையிலேயே வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் என்ற இடத்தில் கூலித் தொழிலாளி பாலாஜி (வயது 41) என்பவர் மதுபோதையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் கீழே அமர்ந்து பட்டாசின் திரியைக் கொளுத்தி விட்டு எழுந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளார். அதே சமயம் அவர் பற்ற வைத்த பட்டாசு வெடித்ததால் முகம் மற்றும் கால்கள் கருகி சம்பவ இடத்திலேயே பாலாஜி உயிரிழந்துள்ளார். இதையடுத்து பாலாஜியின் உடலைக் கைப்பற்றிய பெருந்துறை போலீசார் இது குறித்து விசாராணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.