Skip to main content

கணவரைக் கொன்று ஏரிக்கரையில் போட்டுவிட்டு வந்தோம்... காதலனுடன் மனைவி பரபரப்பு வாக்குமூலம்!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

Erode

 

தன் காதலுக்குக் கணவர் தடையாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி ஏரிக்கரையில் போட்டுவிட்டு வந்துவிட்டோம் என்று மனைவி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

 

ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவில் உள்ள கோட்டுபுள்ளாம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார். 30 வயதான இவர் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூரில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இந்துமதி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். 

 

இந்தநிலையில் இந்துமதி, "கடந்த 9ஆம் தேதி தனது கணவர் குமார் வெளியே சென்றார். வீடு திரும்பவில்லை என அக்கம் பக்கத்திலும், மாமனார் வீட்டிற்கும் தகவல் சொல்லியுள்ளார்." இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் குமாரை தேடி வந்தனர். குமார் காணவில்லை என்பதைப் பற்றி போலீசில் புகார் அளிக்கலாம் என உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொண்டிருந்த நேரத்தல், ஏரிக்கரையில் ஒரு சாக்குமூட்டையில் குமார் சடலமாகக் கிடந்தார் எனத் தகவல் பரவியது. 

 

இதையடுத்து அங்கு குமாரின் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்தனர். இதே போல் தகவல் அறிந்த நம்பியூர் போலீசார் அங்கு வந்தனர். குமாரின் உடலைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறினர். அவரது மனைவி இந்துமதியும் கதறி அழுதார். 

 

போலீசார் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

 

தனிப்படை போலீசார் குமாரின் மனைவி இந்துமதியை விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் கோபி வடுகபாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (28) என்பவருக்கும் இந்துமதி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்கள்.

 

போலீசில் இந்துமதி, “கோபியில் உள்ள அட்டை கம்பெனியில் வேலை பார்த்தபோது தானும், குமாரும் காதலித்தோம். பின்னர் திருமணம் செய்துகொண்டோம். பச்சைமலையில் ஒரு வீடு எடுத்து வசித்து வந்தோம். வீடு அருகில் ஒரு லேத் பட்டறை உள்ளது. அங்கு ஸ்ரீதர் அடிக்கடி வந்து சென்றார். அப்போது எனக்கும், ஸ்ரீதருக்கும் பழக்கம் ஏற்பட்டுத் தகாத உறவாக மாறியது. இது குமாருக்குத் தெரிந்ததால் என்னைக் கண்டித்தார். பின்னர் நாங்கள் கோட்டுப்புள்ளாம்பாளையத்துக்கு குடி வந்தோம். ஸ்ரீதரும் காதல் திருமணம் செய்துகொண்டவர். அவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

 

http://onelink.to/nknapp

 

ஆனாலும் எனக்கும், ஸ்ரீதருக்கும் பழக்கம் தொடர்ந்தது. அதனால் நானும், ஸ்ரீதரும் சேர்ந்து குமாரை கொல்ல முடிவு செய்தோம். கடந்த 9-ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் குமார் படுத்திருந்தார். அதற்கு முன்னதாகவே ஸ்ரீதர் வீட்டில் வந்து ஒளிந்திருந்தார். படுத்திருந்த குமாரின் முகத்தில் தலையணையால் நான் அமுத்தினேன், ஸ்ரீதர் ஓடிவந்து மரக்கட்டையால் என்கணவரை தாக்கினார். இதில் அவர் இறந்துவிட்டார்.

 

பின்னர் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி வீட்டில் வைத்துவிட்டோம். அன்று நள்ளிரவு ஸ்கூட்டியில் பிணம் இருந்த சாக்குமூட்டையை வைத்து கொண்டுசென்று ஏரிக்கரையில் போட்டுவிட்டு வந்துவிட்டோம்” என வாக்குமூலத்தில் கூறி உள்ளார். 

 

ஸ்ரீதரையும், இந்துமதியையும் கைது செய்த போலீசார் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.