
ஈரோடு முனிசிபல் காலனி கிருஷ்ணசாமி தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு கவுதம் (வயது 30), கார்த்தி (வயது 26) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் செக்கு எண்ணெய், மசாலா பொடிகள், மலை தேன் போன்றவற்றை வீட்டிலேயே விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கும் இவர்களது மாமாவான மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகத்துக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கவுதம், கார்த்தி ஆகிய இருவரும் ஆறுமுகசாமி உடன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் கவுதம், கார்த்தி ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்தபோது, அவர்களது வீட்டுக்கு வந்து ஆறுமுகசாமி தகராறு செய்துள்ளார். சத்தம் கேட்டு கவுதம், கார்த்தி ஆகிய இருவரும் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். அப்போது அண்ணன், தம்பிக்கும் ஆறுமுகசாமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை கார்த்தி செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்தியையும், கவுதமையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் அங்கேயே சரிந்து விழுந்தனர். பின்னர் ஆறுமுகசாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கவுதம், கார்த்தி ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொலையில் ஆறுமுகசாமி உடன் மற்றொருவரும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இரண்டு பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அண்ணன், தம்பி இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.