
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (31.05.2021) காலை ஈரோடு காளிங்கராயன் இல்லத்தில் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக, சங்கச் செயலாளர் நக்கீரன், முதன்மைச் செய்தியாளர் ஜீவாதங்கவேல் தலைமையில், துணை தலைவர் தூர்தர்சன், செய்தியாளர் மூர்த்தி, பொருளாளர் தினமணி புகைப்படக் கலைஞர் ரவிச்சந்திரன், துணைச் செயலாளர் ஜீ.வி, நிருபர் நவீன், செயற்குழு உறுப்பினர்கள், செய்தியாளர்கள், கலைஞர் டி.வி. பழனிச்சாமி, விடுதலை சண்முகம், தினகரன் மகேந்திரன், சத்தியம் டி.வி. வேலுச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தமைக்கு முதல்வருக்கு நன்றி தெரித்ததோடு, முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் குருகுலமான ஈரோடு பெரியார் மண்னுக்கு வருகை தந்ததற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்கள்.
மேலும், முதல்வர் நிவாரண நிதிக்கு ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக ரூபாய் 25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. இதற்கு முதல்வர், சங்க நிர்வாகிகளுக்குப் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.
தொடர்ந்து முதல்வரிடம்,
1) மாவட்ட அளவில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கும் அரசு அங்கீகார அட்டை (Accreditation Card) வழங்க வேண்டும்.
2) தாலுகா அளவில் பணிபுரியும் அனைத்து தகுதி வாய்ந்த நிருபர்களுக்கும் ரூபாய் 5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
3) பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கு, ஆந்திர அரசு வழங்குவதைப் போல், தனியார் பள்ளி, கல்லூரிகளில் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்க வேண்டும்.
4) கரோணாவால் மறைந்த கோபிசெட்டிபாளையம் புதிய தலைமுறை செய்தியாளர் சந்திரசேகர் உட்பட அனைவரது குடும்பத்திற்கும் அரசு சார்பில் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
எனும் நான்கு கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் திமுகவின் துணை பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் உடனிருந்தார்.