ஈரோடு மாவட்டம் பெருந்துறையடுத்துள்ள பணிக்கம்பாளையத்தில் தனியார் பனியன் கம்பெனி உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் அருகிலேயே பல்வேறு இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதேபோல் ஒடிசா மாநிலம் குண்டாபாய் பகுதியை சேர்ந்த 30 வயது நாகேந்திரா பெகாரா, அதே மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது நிரஞ்சன் பெஹார ஆகியோர் அந்தக் பனியன் கம்பெனிக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்கியிருந்து அங்கு வேலைக்கு செய்து வந்தனர்.
நாகேந்திர பெகாராவுக்கும் அதே பகுதியை சேர்ந்த நான்கு பேருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த 4 பேரும் நேற்று இரவு நாகேந்திர பெகாரா தங்கி இருக்கும் வீட்டுக்கு வந்தனர். பிறகு அந்த கும்பலுக்கும் அவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. திடீரெனு அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அருவாள் ,கத்தியால் நாகேந்திர பெகாராவை சரமாரியாக வெட்டினர்.
இதில் அவருக்கு தலை, கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயம் விழுந்து உயிருக்காக்க போராடினார். அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பிறகு பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் மூலம் நாகேந்திர பெகாராவை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். வடமாநில வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.