ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பீக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 43 வயது விவசாயி தங்கவேல். வனப்பகுதியையொட்டி இக்கிராமம் உள்ளதால் இங்கு யானை, மான், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க அக்கிராமப் பகுதியில் உள்ள விவசாயிகள் அவர்களது தோட்டத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் விவசாயி தங்கவேல் நேற்று இரவு தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக இவரது நிலத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி விட்டார். இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த தங்கவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து தங்கவேல் இறப்புக்கு காரணமான மின்வேலியை அமைந்துள்ள விவசாய தோட்ட உரிமையாளர் விஸ்வவநாதன் என்பவருக்கு சொந்தமானது என்பதால் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த தங்கவேலுவின் இறப்புக்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்ய வேண்டும் என தங்கவேலின் உறவினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் சத்தியமங்கலம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் புகாரின் பேரில் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து இன்று மாலை தங்கவேலின் உடல் பிரேதப்பரிசோதனை முடிந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காட்டு விலங்குகள் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கத்தான் இந்த மின் வேலி அமைக்கப்படுகிறது. இந்த மின் வேலியில் அனுப்பப்படும் மின்சாரம் குறைந்த அளவு மட்டுமே அதாவது தொட்டால் லேசாக ஷாக் அடிக்கும் படி தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த மின் வேலியில் உயர் அழுத்த அதிக அளவு மின்சாரம் அனுப்பப்பட்டிருக்கிறது வனப்பகுதியில் வாழும் மக்களுக்கு வன விலங்குகள் மட்டுமல்ல அதை தடுக்கும் விதமாக வைக்கப்பட்ட மின் வேலியும் அடிக்கடி உயிர்களை பறிக்கும் பரிதாபம் நிகழ்கிறது.