Skip to main content

குடிக்காதே... அப்படித்தான் குடிப்பேன்... கொலையில் முடிந்த கொடூரம்...!

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

மனிதனை மனிதன் கொலை செய்வது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதுவும் குடியால் ஏற்படும் விபரீதம் தான் அதிக கொலையில் முடிவதாக தெரியவந்துள்ளது. அப்படித்தான் இந்த பயங்கர கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

Erode incident - Alcohol  issue

 



ஈரோடு நகரத்தில் உள்ளது சூளை நெசவாளர் காலனி லட்சுமி நகர். இப்பகுதியின் வழியாக பிச்சைக்காரன் பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் பாலத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் ஒரு வாலிபரின் தலை மட்டும் தனியாக கிடந்தது. அந்த வழியாக சென்ற ஒருவர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு அவர் உடனடியாக தகவல் கொடுத்தார்.

பிறகு ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், பன்னீர்செல்வன் மற்றும் போலீசார் என ஒரு படையே  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. அங்கு பாலத்தின் ஒரு தூணில் ரத்தக்கறையுடன் ஒரு நபரின்  தலை மட்டும் தனியாக கிடந்தது. இதனை தொடர்ந்து உடலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அங்கிருந்து இரண்டு வீதிகளை தாண்டி  ஓடையின் கரையோரமாக உடல் கிடந்தது.

 



அங்கு சென்று போலீசார் பார்வையிட்டனர். பேன்ட் மற்றும் டி-சர்ட் அணிந்த நிலையில் தலையில்லாமல் அந்த உடல் கிடந்தது. அங்கிருந்து சற்று தொலைவில் ரத்தக்கறையும் படிந்து இருந்தது. பிறகு உடலையும், தலையையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்தது தொடர்பாக அருகே இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

அந்த விசாரணையில் கொலையுண்டவரின் அடையாளமும் கொலைக்கான காரணமும் தெரிய வந்தது. சேலம் மாவட்டம் பச்சபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (24). திருமணமான இவர் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள சாயப்பட்டறையில் வேலை பார்த்து அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை பிரித்திவிராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சூளை நெசவாளர் காலனி அருகே உள்ள ஒரு ஓடையில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவர், இங்கு மது அருந்தக் கூடாது வேறு எங்கேயாவது சென்று குடியுங்கள் என கூறியுள்ளார்.

 



இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் முஸ்தபா வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் பிரிதிவிராஜ் அவரது நண்பர் மணிகண்டன் சில நண்பர்கள் சேர்ந்து முஸ்தபா  வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இது கைகலப்பாக மாறிவிட, இதனால் ஆத்திரமடைந்த முஸ்தபா, மணிகண்டன், பிரிதிவிராஜை  தாக்கி உள்ளார். உடன் வந்த மற்ற நண்பர்கள் தப்பி சென்று விட்டனர். பின்னர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்த முஸ்தபா மணிகண்டனை குத்தினார். இதில் அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.  அதன் பின்னர்  பிரித்திவிராஜ் தலையை தனியாக துண்டித்து மிக கொடூரமாக கொலை செய்துள்ளார். 

பின்னர் அந்த தலையை எடுத்து சென்று  ஓடை  பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இக்கொலை குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி முஸ்தபாவை தேடி வருகின்றனர். இளைஞர் ஒருவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்