Skip to main content

என்னைக் கடத்தியது யார்? இளமதி பரபரப்பு வாக்குமூலம்!

Published on 16/03/2020 | Edited on 17/03/2020

காதல் மற்றும் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளம்பெண் இளமதியை மர்ம நபர்கள் கடத்திச்சென்றதாக காதல் கணவன் அளித்த புகாரின்பேரில், சேலம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மார்ச் 16) ஆஜரான அவர், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

Erode ilamathi statement

 



ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் & செல்வி தம்பதியின் மகள் இளமதி (23). பவானி அருகே உள்ள தருமாபுரி சலங்கப்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் செல்வன் (28). இருவரும் பவானியில் உள்ள ஒரு தனியார் காட்டன் மில்லில் வேலை செய்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள நிலையில், இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரிய வந்தது. 

செல்வன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இளமதி, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இளமதிக்கு வேறிடத்தில் திருமண ஏற்பாடுகள் தொடங்கிய நிலையில், கடந்த மார்ச் 9ம் தேதியன்று இருவரும் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர். அன்று பகல் 11 மணியளவில் அவர்கள், சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள காவலாண்டியூரைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழக (திவிக) பிரமுகர் ஈஸ்வரன் முன்னிலையில் பெரியார் படிப்பகத்தில் வைத்து சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், இளமதியைத் தேடி அவருடைய தந்தை ஜெகநாதன் உள்பட உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் அன்று இரவு கொளத்தூர் விரைந்தனர். அவர்கள் இளமதியை தனியாக ஒரு காரில் கடத்திச் சென்றதோடு, அவருடைய காதல் கணவன் செல்வன், சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்த ஈஸ்வரன் ஆகியோரையும் கடத்திச்சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 

Erode ilamathi statement

 

 

இதையடுத்து, காவல்துறையினர் விரைந்து எடுத்த நடவடிக்கையால் 9ம் தேதி இரவே செல்வனும், ஈஸ்வரனும் பத்திரமாக மீட்கப்பட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். ஆனால், கடத்தப்பட்ட இளமதி குறித்து எந்த தகவலும் இல்லை. இதற்கிடையே, தங்களைத் தாக்கியதாகவும், கடத்தப்பட்ட இளமதியை மீட்டுத்தரக்கோரியும் செல்வனும், ஈஸ்வரனும் தனித்தனியாக கொளத்தூர் காவல்நிலையத்தில் மார்ச் 10ம் தேதி காலையில் புகார் அளித்தனர். 

இரண்டு புகார்களின் பேரிலும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முதல்கட்டமாக பெண்ணின் தந்தை ஜெகநாதன் உள்பட 18 பேரை கைது செய்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க கடத்தப்பட்ட இளமதி எங்கே? என்ற விவகாரம், சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மட்டுமின்றி, மக்களவையில் திமுக எம்பி செந்தில்குமாரும் இளமதியை மீட்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

இந்த பரபரப்புக்கிடையே, மார்ச் 14ம் தேதி மதியம் ஒரு மணியளவில், பவானியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் உடன் இளமதி, மேட்டூர் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் ஆஜர் ஆனார். இளமதிக்கு பாதுகாப்பாக பாமக, கொமதேக, திமுக, அதிமுக கட்சிக் கொடிகள் கட்டப்பட்ட கார்களில் உறவினர்கள் 300க்கும்  மேற்பட்டோர் குவிந்ததால் மேட்டூர் மகளிர் காவல்நிலைய பகுதியில் அசாதாரண நிலை உருவானது. 

இளமதியுடன் செல்வனை தனியாகப் பேச வைக்க வேண்டும் என்று திவிகவினர் எவ்வளவு முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. காவல்துறையும், பெண் தரப்பு வழக்கறிஞர்களும் அனுமதிக்க மறுத்து விட்டனர். அப்போது காவல்நிலையத்தில் இளமதி, ''என்னை யாரும் கடத்திச்செல்லவில்லை. இப்போது என் தாயாருடன் செல்ல விரும்புகிறேன்,'' என்று எழுத்துப்பூர்வமாக தன்னிலை விளக்கம் அளித்தார். அவர் செல்வனுடன் செல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டதாக அவர் தரப்பு வழ க்கறிஞர் சரவணன் ஊடகங்களிடம் கூறினார்.

''இளமதியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய தாயாருடன் அனுப்பி வைக்கக் கூடாது. அரசு காப்பகத்திற்குதான் அனுப்ப வேண்டும்'' என்று  திவிக நிர்வாகிகள் காவல்துறையினரிடம் முறையிட்டனர். காப்பகத்திற்கு அனுப்புவதுதான் சரியாக இருக்கும் என்று ஆய்வாளர் சக்ரபாணியும் அழுத்தம் கொடுக்க, டிஸ்பி சவுந்திரராஜனோ அவருக்கு முட்டுக்கட்டை போட்டார். இளமதி அவருடைய தாயாருடன் அனுப்பி வைக்கப்படுவார் என டிஎஸ்பி கூறினார். அதன்படி இளமதியும் தாயாருடன்  சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்றார். 

 



இதை ஏதோ தேர்தல் கொண்டாட்டம் போல, தெருவெங்கும் ஆரவாரமாக முழங்கியபடியே கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் இளமதிக்கு ஆதரவாக வந்த உறவினர்கள், கட்சியினர் ஊர்வலம் போல சென்றனர். இச்சம்பவம் முடிவுக்கு வர அன்று இரவு 9.30 மணி ஆனது. மார்ச் 14 அன்று, இளமதியை அழைத்துக்கொண்டு ஈரோடு செல்லும்போது வெகு நேரம் ஆகிவிட்டதால், அன்று இரவு ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்திலேயே அவரை தங்க வைத்தனர். 

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மார்ச் 10ம் தேதியன்று, இளமதியின் தாயார் செல்வி, தன் மகளை கடத்திச்சென்று விட்டதாக திவிக தலைவர் கொளத்தூர் மணி, அந்த அமைப்பின் பிரமுகர்கள் ஈஸ்வரன், சரவணபரத் மற்றும் இளமதியின் காதல் கணவர் செல்வன் ஆகியோர் மீது ஒரு புகார் அளித்து இருந்தார். அந்த புகாரின்பேரில், இளமதியை மறுநாள் (மார்ச் 15) பவானி ஜே.எம்.&1 வது நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் ஜீவா பாண்டியன் முன்னிலையில் அவருடைய வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போதும் அவர், தான் தன் பெற்றோருடன் செல்லவே விரும்புவதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் சொன்னார். அதன்பிறகு அவரை தாயாருடன் செல்ல அனுமதித்து மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.

இந்நிலையில்தான், தன்னை தாக்கிவிட்டு தனது காதல் மனைவியை கடத்திச்சென்று விட்டதாக செல்வன் அளித்த புகாரின்பேரில், இளமதியை அவருடைய வழ க்கறிஞர் சரவணன் திங்கள்கிழமை (மார்ச் 16) சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்னிலையில் மதியம் 3 மணியளவில் ஆஜர்படுத்தினார். அவர்கள்  இளமதியை அழைத்துக்கொண்டு மதியம் ஒரு மணிக்கெல்லாம் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டாலும், நீதிபதி வருவதற்கு தாமதம் ஆனதால், அதுவரை காத்திருந்தனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்களைத் தடுக்க காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது. பெண் வீட்டாருக்கு ஆதரவாக சேலத்தைச்  சேர்ந்த பாமக நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

நீதிபதி வந்தபோது, இளமதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு கருத்தைச் சொன்னார்கள். அப்போது நீதிபதி, இளமதி மேஜர் ஆனவரா? அதற்கு ஏதேனும் பிறப்புச்சான்றிதழ், கல்விச்சான்றிதழ் ஆதாரம் இருக்கிறதா? எனக்கேட்டார். அப்போது அவர்களிடம் அதற்கான சான்றுகள் இப்போது கைவசம் இல்லை என்றனர். பிறகு, அவருடைய பிறந்த வருடம், தேதியைச் சொல்லும்படி கேட்டார். இளமதிக்கு 23 வயது ஆகிவிட்டது. அவர் மேஜர் ஆகிவிட்டார். அவர் 1997ம் ஆண்டில் பிறந்தவர் என்று கூறினர். அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர், இந்த வழக்கிற்கு சி.எம்.பி. எண் போடப்பட்ட பிறகு மீண்டும் விசாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, சிறிது நேரம் ஒத்திவைத்தார்.

இதையடுத்து அரை மணி நேரத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. செல்வன் தரப்பில் வழக்கறிஞர்கள் பார்த்திபன், கனகராஜ், சங்கர், தமயந்தி ஆகியோர் ஆஜரானார்கள். செல்வன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படவில்லை.நீதிமன்ற கூண்டில் ஏறிய இளமதி, ''நான் கடத்தப்பட்டதாக செல்வன் புகார் அளித்திருந்தார். ஆனால் என்னை யாரும் கடத்திச்செல்லவில்லை. நானாகாத்தான் பெற்றோருடன் சென்றேன். நான் என் பெற்றோருடனேயே செல்ல விரும்புகிறேன். என் முடிவில் யாருடைய தலையீடும் இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே மேட்டூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் எழுத்து மூலமாக வாக்குமூலம் அளித்திருக்கிறேன்.,'' என்று விளக்கம் அளித்தார். அதற்கு செல்வன் தரப்பு வழக்கறிஞர்கள் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி குமரகுரு, அவர் விருப்பப்படியே பெற்றோருடன் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, செல்வன் தரப்பு வழக்கறிஞர்கள், சம்பவத்தன்று இளமதி கடத்திச் செல்லப்பட்டதாக செல்வன் புகார் அளித்து இருந்தார். செல்வன் அளித்த புகாரின்பேரில் கொளத்தூர் காவல்துறையினர், கடத்தல் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் நபரே தன்னை யாரும் கடத்தவில்லை என்று சொன்னபிறகு, எதிர்காலத்தில், செல்வன் அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில் ஏதேனும் மாற்றம் செய்வதாக இருந்தால் அது குறித்து எங்களுக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும்,'' என்று கோரிக்கை விடுத்தனர். அதையும் நீதிபதி ஏற்றுக்கொண்டு, நோட்டீஸ் மூலம் தெரிவிக்கப்படும் என்று பதில் அளித்தார்.

மேலும் செல்வன் தரப்பு வழக்கறிஞர்கள், புகாரில் சொல்லப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்து இளமதியை அவர் தரப்பு வழக்கறிஞர்கள், உறவினர்கள் பாதுகாப்பாக பின்பக்க வழியாக அழைத்துச்சென்று காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இந்த வழக்கால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.