Skip to main content

"உண்மை தெரியோனும் சாமி...!" -இறந்த மகள்களை பெற்ற பெற்றோர் கண்ணீர்...

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

"ஐயா, சாமி... நாங்க செத்துப் போன எங்க புள்ளைக உயிரை திருப்பிக் கேட்கலே... அவுங்க எப்படி செத்தாங்கனு நீதி தானுங்கைய்யா கேட்கிறோம்" என பரிதாபமாக கண்ணீர் விடுகிறார்கள் இரண்டு பெண் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் .

 

erode girl missing

 

 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கழுதப்பாளி  என்கிற குக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  கரியான் மற்றும்   ஆறுமுகசாமி. விவசாய கூலி வேலை செய்து வரும் இவர்கள் அவர்கள் நேற்று தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்கு நடந்த  மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். பிறகு அவர்கள் கூறும்போது

நாங்கள் இரண்டு குடும்பம் எங்கள் கிராமத்தில்  பக்கத்து பக்கத்து வீட்டில்  வசித்து வருகிறோம்.  எங்களது மகள்கள் 16 வயது  சுகந்தி, 14 வயது ஓவியா இருவரும்  அரசு பள்ளியில் சுகந்தி பத்தாம் வகுப்பும் ஓவியா எட்டாம் வகுப்பும் படித்து வந்தார்கள்.

கடந்த  ஜனவரி  மாதம் 1 ந் தேதி புது வருடம்  இருவரும் கோயிலுக்கு சென்று வருவதாக வீட்டில்  கூறிவிட்டு போனவர்கள் தான் அவர்கள் இருவரும் மீண்டும் திரும்பி வரவே இல்லை. மூன்றாவது நாள் அதாவது ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பூங்கில்பட்டி என்ற இடத்தில் ஓடும்  பவானி ஆற்றில் சுகந்தியும் ஓவியாவும் பிணமாக மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்   பிரேத சோதனை அறிக்கையில் சுகந்தியும் ஓவியாவும் தண்ணீரில் மூழ்கி  இறந்து விட்டதாக தெரிவித்து இருந்தனர்.  ஆனால் நாங்கள் இதை நம்பவில்லை. எங்களது மகள்கள்  சாவில் மர்மம் இருக்கிறது. சுகந்தியும், ஓவியாவும் இறப்பதற்கு  முன்பு  பவானி ஆற்றங்கரையில் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த படம் வெளி வந்துள்ளது.  எனவே தான் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  எங்களது மகள்களுடன் உடன் சென்றவர்கள் யார்?யார்?  என்று போலீசார் விசாரிக்க வேண்டும். இதற்கு  உண்மை நிலையைக் கண்டறிய மாநில சிறப்பு புலனாய்வுத் துறை மூலமாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். நாங்களும் இந்த ஏழெட்டு மாதமாக ஒவ்வொரு அரசாங்க ஆபீசுக்கும் போய் மனு கொடுத்திட்டோம். இன்னும் எங்களுக்கு நீதி கெடக்கலே. நாங்க கேட்கறது எங்கபுள்ளைக இறந்தது இறந்தது தான் ஆனா அது விபத்து இல்லே என்னவோ நடந்திருக்குது அது என்னனு எங்களுக்கு உண்மை தெரியோனும் சாமி " என கண்ணீருடன் கதறினார்கள் மகள்களை பெற்ற பெற்றோர் .

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓய்ந்தது பிரச்சாரம்; முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாழை மஞ்சள் மற்றும் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயக் கூலி வேலைக்கு மக்கள் அதிகம் சென்று வருகின்றனர். முன்னதாக பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிய நிலையில் கட்சினர் தங்கள் பலத்தைக் காட்ட கூட்டத்தைத் திரட்டினர். இதனால் பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கூலி ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயக் கூலி வேலைக்கு செல்வோருக்கு தினக்கூலியாக ரூ.200 முதல் ரூ.350 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

காலையில் சென்று மாலை வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரத்துக்கு காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் சென்றால் போதுமானது. தினக்கூலியாக 300 ரூபாய் வரை கிடைக்கிறது. இதுபோக சிக்கன், மட்டன் பிரியாணி கிடைக்கிறது. குடிமகன்களுக்கு மதுவும் வாங்கி தரப்படுகிறது. இதனால் விவசாய கூலி தொழிலாளர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பவானிசாகர் கிராமப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றதால் வரும் நாட்களில் தொழிலாளர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.