
ஈரோடு மாநகர் பகுதியில் கரோனா தடுப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மாநகர் பகுதியில் தோற்று பரவி வருவதால் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. துப்புரவு பணியாளர்கள் ஈரோடு நகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் தினமும் கிருமி நாசினி தெளித்து பிளீச்சிங் பவுடர் போடுவது உட்பட கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு புதிய முறையில் ஆவி பிடிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஸ்டவ் அடுப்பு மேல் குக்கர் வைத்து அதன் மேல் பகுதியில் 5 அடி நீளத்திற்கு குழாய் அமைத்து முன் பகுதியில் குனல் வழியாக ஆவி பிடிக்கின்றனர்.
குக்கரில் வேப்பந்தலை, நொச்சி இலை, மூலிகைத் தைலம் போன்றவற்றை போட்டு அதை அடுப்பில் வேக வைத்து அதன் மூலம் நீராவி பிடிக்கின்றனர். இன்று மட்டும் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் இந்த புதிய முறையில் நீராவி பிடித்து சென்றனர். குக்கர் குழாய் மூலம் ஆவி பிடிப்பது புதிய முயற்சியாக உள்ளது.