Skip to main content

குடி போதைக்கு அடிமையானதால் பாதை மாறிய இளைஞர்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

erode district youth incident police investigation

 

குடி போதையால் பாதை மாறி பைத்தியம் பிடித்த ஒரு இளைஞர், போதை ஏற்ற பணம் இல்லாமல் கொலையாளியாக மாறிய கொடூரம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.

 

ஈரோடு மாவட்டம், அவல் பூந்துறை என்ற கிராமத்தில் பாரதி வீதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி ஜெல்லின் மேரி. இவர்களுக்கு பாரதி வெண்ணிலா என்ற மகளும் பூவிழி செல்வன் என்ற மகனும் உள்ளனர். மகள் பாரதி வெண்ணிலாவுக்கு திருமணமாகி அடுத்த வீதியில் வாடகைக்கு ஒரு வீட்டில் தனது கணவருடன் வசித்து வருகிறார். பூவிழி செல்வனுக்கும் ஷர்மிளா என்ற மனைவியும், அக்ஷதா என்ற குழந்தையும் உள்ளனர்.

 

போதைக்கு அடிமையான பூவிழி செல்வன் முறையாக வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தினரிடம் குடிப்பதற்குப் பணம் கேட்டு தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் குடி போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்படவே, அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்துள்ளார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகும் குடிப்பதற்குப் பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்ய, சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவி ஷர்மிளா குழந்தையுடன் கோவையில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

 

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 12- ஆம் தேதி பூவிழி செல்வன் கோவையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு மது போதையில் சென்றுள்ளார். அங்கு மாமனார், மாமியார் மற்றும் மனைவியுடன் சண்டை போட அவர்கள் பூவிழி செல்வனை அடித்து விரட்டியுள்ளனர். பிறகு, கோவையிலிருந்து ஈரோடு வந்து அவல்பூந்துறையில் உள்ள தனது வீட்டிற்கு நள்ளிரவு வந்துள்ளார்.

 

அங்கு வீட்டில் இருந்த தனது தாய் ஜெலின்மேரியிடம், 'மதுகுடித்தே தீர வேண்டும், பணம் கொடு' எனத் தொடர்ந்து டார்ச்சர் செய்ய, பணம் தர மறுத்த அவரது தாய் திடீரென வீட்டை விட்டு வெளியே போய் விட்டார். இதனால் செய்வதறியாது கடும் ஆத்திரமடைந்த பூவிழி செல்வன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 95 வயதான தனது பாட்டி காளியம்மாளை எழுப்பி பணம் கேட்டுள்ளார். அந்த வயதான பாட்டி பேசக் கூட முடியாமல் சைகையால் இல்லையென்று கூறியிருக்கிறார்.

 

எப்படியாவது மதுவைக் குடிக்க வேண்டும் என்ற வெறியில் அந்த நபர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துவந்து வயதான பாட்டி என்றும் பாராமல் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாட்டி காளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இந்த கொடூரச் செயல் அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவர காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அரச்சலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, காளியம்மாளின் உடலைக் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போதையில் அங்கேயே இருந்த பூவிழி செல்வனை கைது செய்தனர்.

 

குடிப்பதற்காக அந்த நேரத்தில் பணம் வேண்டும் அதற்காக எப்படிப்பட்ட செயலையும் போதைக்கு அடிமையான மனித மிருகம் செய்யும் என்பதற்கு இச்சம்பவமும் ஒரு உதாரணம்!

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது