Skip to main content

இயல்பு நிலைக்கு திரும்பிய ஈரோடு...

Published on 11/05/2020 | Edited on 11/05/2020
erode district



தமிழகத்திலும் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு வருகிற 17-ஆம் தேதி வரை உள்ள நிலையில் ஊரடங்கு ஒவ்வொரு நகரிலும் படிப்படியாக தளர்வுகள் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறக்கப்பட்டது. 
 

இந்நிலையில் இன்று முதல் டீக்கடைகள் (பார்சல் மட்டும்) பேக்கரி,  உணவகங்கள், பூ பழம் காய்கறி  கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், மின்சார பழுது பார்க்கும் கடை, கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள், குளிர்சாதனம் இல்லாத சிறிய நகை கடைகள், ஜவுளிக்கடைகள் (ஊரக பகுதிகளில் மட்டும்) மிக்ஸி கிரைண்டர் பழுது பார்க்கும் கடைகள், டிவி விற்பனை கடைகள் உள்பட 34 வகை கடைகளுக்கு இன்று முதல் தமிழக அரசு நிபந்தனைகளுடன் திறந்து கொள்ள அனுமதித்துள்ளது. 

 

erode district



அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான டீக்கடைகளில் அதிகாலை முதலே திறந்திருந்தன. அதில் பார்சல் மட்டுமே அனுமதி என்பதால் வியாபாரம் மிகவும் மந்தமாகவே இருந்தது. அதைப்போன்று பேக்கரி கடைகளிலும் சாப்பிட அனுமதி இல்லாமல் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது. ஏறக்குறைய 50  நாட்களுக்கு பிறகு கடைகள் திறந்ததால் கடையில் முதலில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. முககவம்சம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே பார்சலில் டீ வழங்கப்பட்டது. மேலும் சானிடைசர் கடை முன்பு வைக்கப்பட்டிருந்தது. 
 

 

 

erode district


 

இதைப்போல் கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், பவானி, பெருந்துறை உள்பட பகுதிகளில் சிறுசிறு ஜவுளி கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ஆனால் முதல் நாள் என்பதால் வியாபாரம் இன்று பெரும்பாலும் இல்லை. ஆனால் செல்போன் பழுது பார்க்கும் கடைகளில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கட்டுமான பணிக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ளதால் பல இடங்களில் அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு தேவையான பொருட்களான சிமெண்ட், ஹார்ட்வேர் பொருட்கள் வாங்குவதற்கும் கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிகமாக  ஆர்வம் காட்டினர்.  
 

erode district



இதேபோல் ஈரோடு, கோபி, அந்தியூர், சத்தியமங்கலம் பகுதிகளில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் மெக்கானிக் கடைகளில் ஏராளமானோர் தங்களது வாகனங்களை கொண்டு வந்திருந்தனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று பெரும்பாலான ஹோட்டல்களில் பார்சல் மூலமே உணவு வழங்கப்பட்டது. சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர் போன்ற பகுதியில் சாலையோர தள்ளுவண்டி கடைகள் இன்று செயல்பட்டது. அதேபோல் செல்போன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது. ஊரகப் பகுதியில் மட்டும் ஜவுளி கடைகள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், இன்று கோபி, சத்தியமங்கலம், அந்தியூர் பவானி, நம்பியூர், சென்னிமலை போன்ற பகுதிகளில் பாதிக்கு பாதி ஜவுளிக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.  திறக்கப்பட்ட கடைகள் அரசு அறிவித்துள்ளபடி நெறி முறைகளை முறையாகக் கடைப்பிடித்து இயங்குகிறதா என்பதை கண்காணிக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு இருந்தது.  குறிப்பாக முக கவசம் அணிகிறார்களா? சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை அந்தக் குழு கண்காணித்தது. 


இந்நிலையில் பெருந்துறை, அந்தியூர், பவானி, சென்னிமலை போன்ற பகுதிகளில் மதியம் 2 மணி முதல் கடைகளை அடைக்க போலீசார்  வற்புறுத்துவதாக  வியாபாரிகள் புகார் கூறியுள்ளனர்.  அரசு அறிவித்துள்ள நேரம் வரை கடைகளை திறக்க எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.   

ஈரோடு மாவட்டத்தில் இன்று அரசு அறிவித்துள்ளபடி, பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தாலும் மக்கள் வரத் தயக்கம் காட்டினர். இதனால் வியாபாரம் மந்தமாகத்தான் இருந்தது. இனிவரும் காலங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தில்  படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் ஈரோடு மாவட்ட மக்கள் மெல்ல மெல்ல இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்த மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் நிறுத்தப்பட்டு, தற்போது 27 நாட்களை கடந்துள்ளது. எனவே பச்சை மண்டலமாக ஈரோடு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.