Skip to main content

லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து; டிரைவர் உள்பட 2 பேர் பலி

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

erode district perundurai omni bus lorry incident

 

சென்னையில் இருந்து நேற்று இரவு பொள்ளாச்சி நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்தை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 55) என்பவர் ஓட்டி வந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோஸ்வா (வயது 21) என்பவர் பஸ் கண்டக்டராக இருந்துள்ளார். இந்த தனியார் ஆம்னி பஸ் இன்று காலை 5:45 மணி அளவில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் எதிரில் உள்ள மேம்பாலம் முன்பு சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

 

இந்த திடீர் விபத்தால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் விபத்தில் சிக்கி அலறியுள்ளனர். இந்த விபத்தில் பஸ் டிரைவர் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பஸ்சில் பயணம் செய்த நடத்துனர் ஜோஸ்வா (வயது 21), திருப்பூர் மாவட்டம் பல்லடம் லட்சுமி நகரை சேர்ந்த ஜான் நேசன் (வயது 28), அவரது மனைவி ஜெனி (வயது 26), உடுமலையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா (வயது 23), கூடலூரைச் சேர்ந்த டேவிட் ராஜ் (வயது 50), ஜான்சி மேரி (வயது 30), குருசம்மா (வயது 46), உமேஷ் (வயது 12), சென்னை சோலையூரைச் சேர்ந்த பூங்கொடி (வயது 45), திருப்பூரைச் சேர்ந்த ஆதர்ஷ் (வயது 26), ராமாயி (வயது 65), மனோஜ் (வயது 27) ஆகியோர் காயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

இதையடுத்து பெருந்துறை போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாலமுருகன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மிகவும் கவலைக்கிடமாக இருந்த திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ஜான் நேசன் (வயது 28) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் ஜான் நேசன் மனைவி லேசான காயத்துடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.