Erode district perundurai area incident by tirunelveli police 

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சிவசுப்பு என்பவர் உள்ளிட்ட 5 பேர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள குள்ளம்பாளையம் என்ற இடத்தில் பதுங்கி இருந்துள்ளனர். இது குறித்து திருநெல்வேலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ரவுடி கும்பலை பிடிக்க திருநெல்வேலி தனிப்படை போலீசார் பெருந்துறைக்கு சென்றுள்ளனர்.

அப்போது உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ மற்றும் 6 போலீசார் ரவுடி கும்பலை சுற்றிவளைக்க முயன்றுள்ளனர். அந்தசமயத்தில் ரவுடி கும்பல் போலீசாரிடம் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் ரவுடி சிவசுப்பு அரிவாளால் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அதே சமயம் அரிவாளை காட்டி போலீசாரிடம் இருந்து ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து ரவுடி கும்பலை போலீசார் தீவிரமாகத்தேடி வருகின்றனர். இது குறித்து உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினரும் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணைநடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரோட்டில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.