
மனைவி மற்றும் மகன்களை பிரிந்த வேதனையில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த குருவேரெட்டியூர், ரெட்டிபாளையம், ஆலமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 38). இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் செந்தில்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோமதி கணவருடன் கோபித்துக் கொண்டு தனது இரு மகன்கள் உடன் வெள்ளிதிருப்பூர் அடுத்த ஆலம்பாளையத்தில் தனியாக குடியிருந்து வருகிறார். மனைவி, மகன்களை பிரிந்ததிலிருந்து செந்தில்குமார் அவர்கள் நினைப்பாகவே இருந்து வந்துள்ளார். இதனால் மனவேதனையில் மேலும் அதிகமாக குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வேதனையில் இருந்த செந்தில்குமார், வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணைய்யை தனக்குத் தானே ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.