Skip to main content

கரோனாவின் பிடியில் இருந்து தன்னை பாதுகாத்து கொண்ட ஈரோடு!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

தமிழக மக்கள் ஒவ்வொரு நாளும் கரோனா வைரஸ் பாதிப்பு கணக்குகளை பய உணர்வுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக தொடங்கி விட்டது என மத்திய அரசு முதலில் அறிவிப்பு செய்தபோது, 72 மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. அதில் தமிழகத்தில் இரண்டு மாவட்டங்கள்... ஒன்று சென்னை, மற்றொன்று ஈரோடு. இங்குதான் அதிகமான வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் இருக்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் கூறின.

 

Erode - corona virus impact



இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள தற்போதைய சூழலில், அரசு நிர்வாகம் இந்த வைரஸ் தொற்று எப்படி பரவியது என ஆராய்ந்து கணக்கிட்டதில், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தீவிரமாகச் செயல்பட்டது. அதன்படி இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படும் வேலை நடந்தது. தற்போது தமிழகத்தில் சுமார் 14 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ளார்கள்.
 

nakkheeran app



இதில் ஈரோட்டில் மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளார்கள். இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் வீரியமாக பரவி வருகிறது என அறிவிக்கப்பட்டபோது, இந்திய அரசு அறிவித்த 72 மாவட்டங்களில் ஈரோடு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. காரணம் அப்போது ஈரோட்டில் 22 பேர் வைரஸ் தொற்று உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் இந்த வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. 

கடந்த ஏப்ரல் நான்காம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் 32 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக மாநில நிர்வாகம் கூறியது. இந்த 32 பேரில் 4 பேர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கோவையில் உள்ள ஒரு மருத்துவர் ஈரோடு ரயில்வே காலனி மருத்துவமனையில் பணியாற்றியபோது, அவரிடம் சிகிச்சை பெற வந்த ஒரு தாய்லாந்து  நபர் மூலம் இந்த நோய் தொற்று ஏற்பட்டது. அந்த மருத்துவர், அவரது கணவர், அவரது வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்மணி, அவரது குழந்தை என நான்கு பேருக்கும் அந்த கரோனா வைரஸ் உறுதியானது. 

இந்த நான்கு பேரையும் சேர்த்துதான் ஈரோட்டில்  32 பேர் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த 4 பேரும் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.  அப்படி பார்த்தால் ஈரோட்டில் 28 பேர் தான் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இந்த வைரஸ் தொற்று பல்வேறு மாவட்டங்களில் வீரியமாக பரவி வந்தது. இதில் இரண்டாவது இடமாக இருந்த ஈரோடு இன்று தமிழகத்தில் எட்டாவது மாவட்டமாக உள்ளது. முதலிடத்தில் சென்னையை அடுத்து கோவை, திண்டுக்கல், நெல்லை, தேனி, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இந்த தொற்று அதிகம் உள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் தற்போது பரிசோதனையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 15 பேர் மட்டுமே. இவர்களின் ரத்த மாதிரிகளின் முடிவு மட்டும் வர வேண்டியுள்ளது. ஆக இந்திய அரசு முதலில் அறிவித்த மிகவும் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஈரோடு தற்போது பாதுகாப்பான நகரமாக மாறி வருவது பொதுமக்கள் மத்தியில் சற்றே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.