Skip to main content

கண்டறியப்படாத அவர்களால் தமிழகத்திற்கு ஏற்படும் ஆபத்து !

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

 


உலகம் முழுக்க பரவியுள்ள கரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 124 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதியானதாகத் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். 
 

இதில் குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற ஒரு மத அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் அதிகம் பரவியுள்ளது. தமிழகத்திலிருந்து அந்தக் கூட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்றுள்ளார்கள். இதில் ஈரோட்டில் இருந்து மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அதில் கலந்து உள்ளார்கள். அப்படிப்பட்ட நபர்களில் திங்கள்கிழமை (30.03.2020) வரை 24 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மீண்டும் நேற்று பரிசோதனையில் நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி என சில மாவட்டங்களில் இருந்து டெல்லி சென்றவர்கள் உள்பட 50 பேருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் மொத்தமாக கரோனா வைரஸ் தொற்று 57 பேருக்கு தமிழக்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகமொத்தம் தமிழ்நாட்டில் 124 பேருக்கு இது உறுதியாக உள்ளது.
 

இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட பலரும் தங்களது விவரங்களைத் தெரிவிக்காமல் உள்ளார்கள். ஈரோட்டில் இருந்து சென்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்களில் 80க்கும் மேற்பட்டோர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் முழுமையான விவரங்கள் இதுவரை தெரியவில்லை.


மத்திய அரசு அறிவித்துள்ள கரானா வைரஸ் மிகவும் தீவிரமாக உள்ள மாவட்டங்களில் ஈரோடு மாவட்டமும் ஒன்றாக உள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதிதாக இந்த நோய்த்தொற்று ஏற்படவில்லை. வெளி மாநிலத்தில் இருந்து ஈரோட்டிற்கு வந்தவர்கள், தாய்லாந்திலிருந்து ஈரோட்டுக்கு வந்தவர்கள் என அவர்கள் மூலமாகத்தான் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதில் முழுமையாக தங்களது விவரங்களைக் கொடுக்காமல் பலரும் உள்ளார்கள்.

மாநில அரசு அறிவித்துள்ளபடி வெளி மாநிலங்களில் இருந்து நேரடியாக ரயில் மூலம் வந்தவர்கள், சாலை மார்க்கமாக வந்தவர்கள் விவரங்கள் அரசுக்கு இதுவரை பட்டியல் வரவில்லை. 
 

ஈரோட்டில் ஏற்கனவே 27 வீதிகள் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 74 ஆயிரம் பேர் வீட்டில் தனிமைப்பட்டு உள்ளார்கள்.அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் 86 பேர் உள்ளார்கள் ஆனால் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு வந்தவர்கள் விவரம் தெரியாததால் அவர்கள் மூலம் ஈரோடு பகுதியில் மேலும் பலருக்கும் இந்த தொற்றுநோய் பரவியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்படுகிறது.


குறிப்பாக அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடிவுசெய்த அமைப்பு, அதன் நிர்வாகிகள் இது பற்றிய விவரங்களைக் கொடுக்க வேண்டியுள்ளது. மாநில அரசு இந்தத் தகவலை சம்பந்தப்பட்ட நபர்களுக்குக் கூறி உள்ளது. ஆனாலும் இன்று வரை அந்தத் தகவல்கள் தெரியவில்லை என்பதால் ஈரோடு நகர மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிர் பயத்தில் இருக்கும் மக்களுக்கு இது மேலும் அச்சத்தைக் கொடுத்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.