Skip to main content

தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்; போலீசார் தீவிர விசாரணை

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

erode cell phone tower youngster inicent police investigation started

 

ஈரோடு மாவட்டம் கோபி அருகே புது கலைப்புதூர் என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 150 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் ஒன்று உள்ளது. இதில் இன்று (09.05.2023) காலை 8.50 மணியளவில் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 36) என்பவர் திடீரென அந்த 150 அடி உயரமுள்ள செல்போன் டவர் உச்சிக்கு ஏறினார். பின்னர் செல்போன் டவரில் இருந்து கீழே குதித்து விடுவதாகத் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தற்கொலை மிரட்டல் விடுத்த முருகன் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

 

இது குறித்து தகவல் அறிந்ததும் கோபி போலீசார் மற்றும் கோபி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் அதே பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் செல்போன் டவர் பகுதி அருகே குவிந்தனர். கோபி இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, தாசில்தார் ருத்ரமூர்த்தி ஆகியோர் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது குறித்து முருகன் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உறவினர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் மின்சாரத்தையும் மின்வாரிய ஊழியர்கள் அணைத்து வைத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

 

இதனைத் தொடர்ந்து முருகனின் தாய் அங்கு வந்து மைக்கில் மகனிடம் பேசினார். தயவு செய்து கீழே இறங்கி வா... என மகனிடம் அழுதவாறு பேசினார். இதனை அடுத்து கோபி தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி செல்போன் டவர் மீது ஏறினர். பின்னர் முருகன் அவர்களுடன் கீழே இறங்கி வந்தார். இதன் பிறகு போலீசார் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கிட்டத்தட்ட ஒன்னே கால் மணி நேரமாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து முருகன் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். முருகன் எதற்காக செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்