இந்தியாவில் நெருப்பு புகையாக சூழ்ந்திருப்பது மத்திய பா.ஜ.க. மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டம் தான். ஒருபுறம் டெல்லி கலவரம் பதட்டத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் ,முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

Erode - CAA issue

ஈரோட்டில் முஸ்லிம் அமைப்புகள் கடந்த 21ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு செல்லபாஷா வீதியில் தரையில் அமர்ந்து அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் உள்ளனர். குடியிருப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், அது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு உள்ளனர்.

நாளுக்கு நாள் இவர்களின் காத்திருப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் பின் வாங்கவில்லை. அந்தப் பகுதியில் பகலில் சாமியானா பந்தல் போட்டு நாள் முழுவதும் முஸ்லிம்கள் பெண்கள் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பியவாறு உள்ளனர். இரவில் ஆண்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இந்நிலையில் அவர்களின் போராட்டம் இன்று ஏழாவதுநாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் போராட்டக் களத்திற்கு நேரடியாக சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றி வருகின்றனர். டெல்லி போல் கலவரம் செய்ய சமூக விரோதிகள் இங்கு ஊடுருவி விடக் கூடாது என போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.