ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திருவிழா போல் களை கட்டியுள்ளது. அதிமுக - திமுக என்ற இரண்டு பிரதான கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டுள்ளார்கள். குறிப்பாக அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் இங்கு முகாம் அமைத்திட, அதேபோல் திமுகவின் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் என எல்லோரும் களத்தில் இறங்கி உள்ளார்கள். தெருத் தெருவாக வீதி வீதியாகச் செல்லும் இவர்கள் வாக்காளர்களிடம் தங்கள் கூட்டணிக்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அமைச்சர் சி.வி. கணேசன் 11 ஆம் தேதி திருநகர் காலனி பகுதியில் வாக்கு சேகரித்து வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளம்பெண், “அமைச்சர் சார் உங்களோடு ஒரு செல்ஃபி எடுக்கலாமா?” எனக் கேட்டுள்ளார். அதற்கு அமைச்சரும், “ஓ...தாராளமாக... ஆனால் ஓட்டு மட்டும் எங்கள் கூட்டணியான கை சின்னத்திற்கு மறக்காமல் போடுங்கள்” எனக் கூறியுள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் அமைச்சர் கணேசனோடு செல்ஃபி எடுத்துள்ளார்.