Skip to main content

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; மக்களை நெருக்கும் கெடுபிடிகள் 

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

erode by election election commission rules and regulations 

 

ஈரோடு கிழக்கு தொகுதி தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் வாக்களிப்பதற்கு 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேரும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 பேர் உள்ளனர். தேர்தல் அன்று 238 வாக்குச் சாவடிகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

மேலும் வாக்குப்பதிவு அன்று பொதுமக்கள் சிரமம் இன்றி வாக்களிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வாக்குச்சாவடி மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி, மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் தனிப் பாதைகள் அமைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் அன்று மத்திய அரசு ஊழியர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளனர். தற்போது வரை பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் எனக் கண்டறியப்பட்ட 20 வாக்குச் சாவடிகளில் தேர்தல் அன்று மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தேர்தல் அன்று துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்கு வர உள்ளனர்.

 

வாக்குச்சாவடிகளில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இந்த நிகழ்வுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கண்காணிக்கும் வகையிலும், தமிழக தேர்தல் அதிகாரி கண்காணிக்கும் வகையிலும், இந்திய தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு, பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள், மூன்று பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் மற்றும் 10,000 ரூபாய்க்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும்.

 

ரூ.10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்ய நேர்ந்தால் நிலை கண்காணிப்பு குழுவினர் வழக்குப் பதியாமல் வருமானவரித் துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பவும், வங்கி இருப்புக்கான பணம் கொண்டு சென்றாலும் உரிய அனுமதி உடன் கொண்டு செல்ல வேண்டும். இதேபோல் வாக்காளர்களை கவரும் வகையில் சேலை, வேட்டி, டீசர்ட் போன்றவை கொண்டு சென்றாலும் பிரச்சார கூட்டத்தில் காகித தொப்பி, மாஸ்க், துண்டு, ஸ்டிக்கர், பேட்ஜ் போன்றவை வழங்கினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.