Skip to main content

தொடரும் மழை... நிரம்பும் அணை..! - விவசாயிகள் மகிழ்ச்சி..! 

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

Erode Bavanisakar dam water level

 

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணை, மொத்தம் 105 அடி கொள்ளளவு கொண்டது. பவானி சாகர் அணையின்  நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 


இந்த நிலையில், பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சென்ற சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 9ந் தேதி காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 82.89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 907 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 80 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை தொடர்ந்தால் ஒரு வாரத்தில் அணை முழு கொள்ளளவை எட்டும் என்கிறார்கள் பொதுப்பணித் துறையினர்.


இந்த வருடம் முழுக்க குடிநீருக்கும், விவசாய தேவைக்கும் பவானிசாகர் அணை நீர் போதுமானது என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள் விவசாயிகள்.

 

 

சார்ந்த செய்திகள்