Skip to main content

பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய ஈரோடு சங்கம்!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

தை ஒன்று தமிழர் திருநாள் தைப்பொங்கல்... தமிழர்களின் பாரம்பரிய விழாவாக தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு மனிதகுலத்திற்கு ஆபத்தாக பரவிய கரோனா வைரஸ் தொற்றும், அதனால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கமும் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இப்போது வரை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

 

இந்நிலையில் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற தமிழர்களின் கூற்றுப்படி, இந்த தை பொங்கல் திருவிழா மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடி இருப்பினும் தை பொங்கலுக்காக தங்கள் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப புத்தாடைகள், பொங்கல் பொருட்கள், கரும்பு என தேவையான பொருட்களை வாங்கி உற்சாகத்துடன் தை பொங்கலை வரவேற்கிறார்கள் மக்கள். இதில் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் பத்திரிகையாளர் குடும்பத்திற்காக ஒரு சிறப்பான செயலை செய்துள்ளது.

 

மாவட்டத்தில் உள்ள சில நல்ல மனிதர்களின் உதவியோடு, ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நல சங்க உறுப்பினர்கள் குடும்பத்திற்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 13.1.2021 புதன்கிழமை காலை 12 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ஜீவாதங்கவேல், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை ஈரோடு நகர காவல்துறை துணை கண்கானிப்பாளர் ராஜீ மற்றும் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினார்கள்.

 

மாவட்டம் முழுவதும் இச்சங்கத்தில் உறுப்பினராக உள்ள 160 பேர்களுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் வேட்டி, சட்டை, சேலை, பொங்கல் வைக்க தேவையான பொருட்கள், சில உணவு பொருட்கள் என ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மதிப்பில்  25 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது.

 

"ஏற்கனவே கரோனா காலகட்டத்தில் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூபாய் தலா இரண்டாயிரம், ஒரு சிப்பம் அரிசி, மளிகை பொருட்கள் என மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வழங்கி ஒரு முன்னோடியாக பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு நம்பிக்கையை கொடுத்தது ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம். அதேபோல் தற்போது தை பொங்கலை குடும்பத்தோடு மகிழ்வுடன் கொண்டாட பொங்கல் பொருட்கள் வழங்கி சிறப்பான சேவையும், பிற மாவட்ட பத்திரிகையாளர் சங்கங்களுக்கு வழிகாட்டுதலாகவும் இச்சங்கத்தின் செயல்பாடு அமைந்துள்ளது. 'மகிழ்வித்து மகிழ்' என்பதற்கு நீங்களே உதாரணம் என காவல்துறை அதிகாரிகள் பாராட்டினார்கள்.

 

ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தி பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்குவது வழக்கம் அது போலவே இவ்வருடம் நடந்தது என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் சங்க துணை தலைவர்கள் சுப்பிரமணியம், மூர்த்தி, துணைசெயலாளர்கள் ஜோசப்இன்பராஜா, நவீன் மற்றும் நிர்வாகிகளோடு ஈரோடு, பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், பெருந்துறை, சென்னிமலை, கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அரச்சலூர் என மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.