
தங்க நகைகள் அடமானம் வைப்பதில் ரிசர்வ் வங்கி பல்வேறு புதிய நடைமுறைகளை வெளியிட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயல் என்று திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பலரும் ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நகைக் கடங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. சிறிய தொகைக்கு நகைக்கடன் பெறுவோர் பாதிக்கப்படாதவாறு புதிய விதிமுறைகளில் சில பரிந்துரைகளை ஆர்.பி.ஐ.க்கு வழங்கியுள்ளதாக நிதியமைச்சம் தெரிவித்துள்ளது. ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக நகைக்கடன் பொறுவோர், இந்த புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை ஆர்.பி.ஐ. பரிசீலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செயல்படும் நிதி சேவைகள் துறை தங்கக் கடன் பெறும் நடைமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரைவுத் தரநெறிகளை முறைப்படுத்த வேண்டி பரிந்துரைகள் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளிலிருந்து ரூ.2 லட்சத்திற்கு கீழ் கடன் பெறும் சிறு தொகை கடன் பெறுநர்களை விலக்க பரிந்துரை செய்திருக்கிறது.
இருப்பினும் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள், தங்களின் அவசரத் தேவைகள், மருத்துவ மற்றும் கல்வி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றாக தங்க நகைக் கடன்கள் இருப்பதால், அனைத்து தங்க நகைக் கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வழியாக தங்க நகைக் கடன்கள் இருப்பதால், மத்திய நிதி சேவைகள் துறை வழங்கியுள்ள இந்த முக்கிய பரிந்துரைகளுக்கு ரிசர்வ் வங்கி பரிசீலிப்பதுடன், தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டுமென சார்பில் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.