Skip to main content

"தண்ணீர் பற்றாக்குறைக்கு பொதுப்பணித்துறையினரின் அலட்சியமே காரணம்" - இ.பெரியசாமி தாக்கு!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019


 

ஆத்தூர் தொகுதியில் குடிநீர் பஞ்சத்திற்கும் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் போனதற்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

 

 E.Periyasamy

 


திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலிருந்து மழை பெய்யும் போது பெரியாற்றின் மூலமாக வரும் மழைத் தண்ணீரானது பெரிய  கன்னிமார் கோவில் அருகே இயற்கையாகவே அமைந்துள்ள பாறாங்கற்களால் ஆன தடுப்பில் உள்ள இடுக்கின் வழியாகவும், அதற்கு மேலாகவும் வெளியேறும் தண்ணீர், கூழையாற்று தண்ணீருடன் கலக்கிறது.

பின்னர் அது ஆத்தூர் பகுதியில் உள்ள கருங்குளம், பகடைக்குளம், புல்வெட்டிக்குளம் ஆகிய குளங்களுக்கும் குடகனாறு வழியே தாமரைக்குளம், அணைப்பட்டி குளம் நிறைந்து அனுமந்தராயன்கோட்டை, பொன்னிமாந்துறை, மயிலாப்பூர், குட்டத்துப்பட்டி, ஆவாரம்பட்டி, அணைப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் விவசாய பாசனத்திற்காவும், குடிதண்ணீருக்காகவும் பயன்பட்டிருந்தது. மேலும் வக்கம்பட்டி, சீவல்சரகு, வீரக்கல், அனுமந்தராயன்கோட்டை, பித்தளைப்பட்டி ஆகிய கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது. தற்போது சித்தையன்கோட்டை பகுதியில் சிமிண்ட் வாய்க்கால் அமைக்கும்போது பொதுப்பணித்துறையினரின் அலட்சியப் போக்கால் பாறாங்கற்கள் மீது சிமிண்ட்டினால் ஆன கலவையை கொட்டி தடுப்பணை அமைத்துவிட்டனர். 

இதனால் கடந்த ஒரு வருட காலமாக மேற்கண்ட பகுதிகளில் குடிதண்ணீர் பஞ்சமும், விவசாய பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாய சங்க கூட்டத்தினை கூட்டுவதற்கு பலமுறை வலியுறுத்தியும் இதுநாள் வரை கூட்டம் கூட்டவில்லை. இதனை கண்டித்தும், குடிதண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் கிராம மக்கள் நலன் கருதியும் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற தி.மு.க.  உறுப்பினருமான இ.பெரியசாமி அவர்கள் சித்தையன்கோட்டை பாசன சங்க விவசாயிகள் சங்கம், ஆத்தூர் பாசன சங்க விவசாயிகள் சங்கம், தாமரைக்குளம் பாசன விவசாயிகள் சங்கம் (பொன்னிமாந்துறை, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், ஆவாரம்பட்டி, அணைப்பட்டி) ஆகிய விவசாயிகளுடன் சேர்ந்து பழனி பொதுப்பணித்துறையைச் சேர்ந்த இ.இ. மற்றும் பெரியகுளம் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த இ.இ. ஆகியோரை அழைத்து கூட்டம் நடத்தி மேற்கண்ட அனைத்து பகுதி விவசாயிகளின் பிரச்சனைகளுக்கும் பொதுமக்களின் குடிதண்ணீர் பிரச்சனைக்கும் தீர்வுகாண மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். 

 

 E.Periyasamy



மனு கொடுத்துவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் பேசிய, திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, "சிமிண்ட் வாய்க்கால் கட்டும்போதே பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இப்பகுதி விவசாயிகள் பலமுறை எடுத்துக்கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் ஆத்தூர் தொகுதி முழுவதும் கடுமையான குடிதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பலமுறை நான் உட்பட விவசாய சங்கத்தினரும் பலமுறை மனுக்கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடகனாற்று கரையோரம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது பாதிக்கப்பட்டுள்ளது. 

குளங்களில் நீர் நிரம்பாமல் குளத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை. இதனால் ஆத்தூர் தொகுதி மக்கள் கடுமையான குடிதண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் பாதிக்கப்பட்டால் நாங்கள் விவசாயிகள், பொதுமக்களை ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் எனக் கூறினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆத்தூர் தொகுதி மக்கள் விவசாயிகள் நலன் கருதி கன்னிமார் கோவில் அருகே உள்ள தடுப்பணையை ஆய்வு செய்து முறையாக தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மாவட்ட ஆட்சியரின் சந்திப்பின் போது முன்னாள் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், அனுமந்தராயன்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.இன்பராஜ், ஸ்ரீராமபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜா, பொன்னிமாந்துறை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அறிவழகன், ஆத்தூர் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மௌலானா, சுப்பிரமணி மற்றும் தாமரைக்குளம் பாசன விவசாயிகள் பலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும்போது உடன் இருந்தனர். இப்பிரச்சனைக்கு விரைவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீர்வு காணாவிட்டால் மாபெரும்  போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சூர்யா சிவாவின் மனு; ‘போலீஸ் பாதுகாப்பு பேஷனாக மாறிவிட்டது?’ - நீதிபதி பரபரப்பு கருத்து

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Judge sensational comment for Surya Siva petition

கடந்த ஆண்டு பா.ஜ.கவைச் சேர்ந்த சூர்யா சிவாவிற்கும், பாஜகவின் சிறுபான்மை அணியின் டெய்சி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யா சிவா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அடிப்படை பொறுப்பில் இருந்தும் அவர் வகித்து வந்த ஓபிசி அணியின் மாநில செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டு அவர் வகித்து வந்த பதிவியில் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், சூர்யா சிவா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று அளித்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான மனு இன்று (15-02-24) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில், மனுதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, “மனுதாரர் யார் என்பது நீதிமன்றத்திற்கு நன்றாகவே தெரியும். மனுதாரருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியும். இப்போதெல்லாம், ஒருவர், இருவர் போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது” என்று கருத்து கூறி அரசு தரப்பு வாதத்தை ஏற்று சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  

Next Story

ஊரை விட்டு ஒதுக்கியதால் வேதனை; வட்டாட்சியரிடம் ஆதார் கார்டை ஒப்படைத்த குடும்பத்தினர்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

nவர

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டி கிராமத்தில் குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் மிஷின் வைத்துக்கொண்டு கூலி வேலை செய்து வருகிறார்.

 

இந்த வேலை செய்வதால் அனைத்து சமூகத்தைச் சார்ந்த நண்பர்களையும் அவர் கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார். இது அப்பகுதியில் உள்ள சிலருக்குப் பிடிக்காததால், பஞ்சாயத்தில் கூடி முடிவெடுக்கப்பட்டதாக குமார் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததோடு தகாத வார்த்தைகளிலும் திட்டுவதாகக் கூறுகின்றார்.

 

மேலும் வீட்டிற்குச் செல்லும் தண்ணீர் குழாய் துண்டித்துள்ளதாகவும் எந்தக் கோயில்களிலும் அனுமதிக்காமலும் சுப துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் கொலை மிரட்டல் விடுத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்களாம். காரணம் கேட்கும் பொழுது இது பஞ்சாயத்தின் முடிவு என்று கூறுகின்றனர். அதே போல கோயிலுக்காகக் கொடுக்கப்பட்ட பணத்தையும் திருப்பி குமாரிடமே கொடுக்கப்பட்டதாகவும் அடிப்படை உரிமை கூட கிடைக்காத இந்த மண்ணில் வாழ்வதைவிடச் சாவதே மேல் என குடும்பத்தோடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்ததோடு, வட்டாட்சியர் கோவிந்தராஜியிடம் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை என அனைத்தையும் திருப்பிக் கொடுத்துள்ளனர்.

 

நீங்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்கப் போவதாகக் கூறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. வட்டாட்சியர் கோவிந்தராஜ், “நிச்சயம் உங்களுக்கு நீதியை பெற்றுத் தருகிறேன்” என சொன்னதோடு மட்டுமல்லாமல் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளார்.