மேய்க்கால் நிலங்களில் ஆக்கிரமிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்

To ensure that there is no encroachment on grazing lands - High Court

தமிழகம் முழுவதும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனத்தமிழக அரசைச் சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 79 ஆயிரம் குடும்பங்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிடக் கோரியும், சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தைக் குடியிருப்பு நிலங்களாக வகை மாற்றம் செய்யத்தடை உள்ள நிலையில், அந்நிலத்தில் ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்குப் பட்டா வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர், மக்கள் தொகை அதிகரிப்பு, வேலைவாய்ப்புக்காகத்தொழிற்சாலைகள் துவங்க விலக்களிக்கப்படுவதாகவும், இந்த மனு சம்பந்தமாக விரிவான பதில்மனுத்தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, மக்கள் தொகை அதிகரித்து வருவதால், குடியிருப்புகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும், நிலங்களின் தேவை அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நீண்டகால திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

மேலும், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்பும் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இதுதொடர்பான நடவடிக்கை குறித்த விரிவான திட்ட அறிக்கையைத்தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்குத்தள்ளிவைத்தனர்.

highcourt
இதையும் படியுங்கள்
Subscribe