Skip to main content

ரவுடி சங்கரை என்கவுண்டர் செய்த இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டுமா? – சி.பி.சி.ஐ.டி முடிவெடுக்கும் என்கிறது உயர் நீதிமன்றம்!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

encountered Rowdy Sankara  High Court


ரவுடி சங்கர் என்கவுண்டர் விவகாரத்தில் அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த நடராஜன் மீது கொலை வழக்குப் பதிய வேண்டுமா என்பது குறித்து விசாரணையின் முடிவில் சி.பி.சி.ஐ.டி முடிவெடுக்கும் என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

ரவுடிசங்கர் என்கவுண்டர் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி அல்லது சி.பி.ஐ விசாரணை கோரியும், மறு பிரேதப் பரிசோதனை கோரியும், தாயார் கோவிந்தம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் எழும்பூர் மாஜிஸ்திரேட் அறிக்கையும், சி.பி.சி.ஐ.டி விசாரணையின் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


இந்த வழக்கு,  நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, ஆய்வாளர் நடராஜனின் விசாரணை அறிக்கை, சினிமா கதைபோல புனையப்பட்டுள்ளது.  பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பார்க்கும்போது, தற்காப்புக்காக சுட்டதாகத் தெரியவில்லை. திட்டமிட்டே படுகொலை செய்துள்ளார். அதனால், ஆய்வாளர் நடராஜன் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.


அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சங்கர் என்கவுண்டர் தொடர்பான வழக்கில் பிரிவுகளை மாற்ற வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து விசாரணைக்குப் பிறகுதான் சி.பி.சி.ஐ.டி முடிவெடுக்கும் எனத் தெரிவித்தார்.

 

Ad

 

பிரேதப் பரிசோதனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவரின் முன்னிலையில் செய்யப்படவில்லை என்பது தொடர்பாக, கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் சங்கரசுப்பு தெரிவித்தார். கோவிந்தம்மாள் தாக்கல் செய்த கூடுதல் மனு, நீதிபதிக்கும், சி.பி.சி.ஐ.டி தரப்பிற்கும் கிடைக்காததால், விசாரணையை செப்டம்பர் 14 -ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்