Encounter Specialist ADSP Vellathurai action job removal

ஜெயலலிதா ஆட்சி காலத்தின்போது ஐ.ஜி. விஜயகுமார், சந்தன கடத்தல் வீரப்பனை ஒடுக்கப் பணியில் அமர்த்தப்பட்டவர். அவரது குழுவில் இருந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாட்டைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை. இவர், வீரப்பனைச் சுட்டுக் கொன்றதால் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பி.யானவர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் வழக்கில் கைதான ரவுடி, மற்றும் மதுரையில் எஸ்.ஐ.க்களைக்குத்திய ரவுடிகளை என்கவுண்டர் செய்ததில் ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ எனப் பெயர் பெற்றவர் வெள்ளத்துரை. அதே போல், 2003ஆம் ஆண்டில் சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்து பெயர் பெற்றார். மேலும், புதுக்குளம் பாரதி, பிரபு ஆகியோர் வெள்ளத்துரையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Advertisment

தற்போது திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக ஏ.டி.எஸ்.பியாக வெள்ளத்துரை பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் திடீரென்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீதான என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடியில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, கடந்த 2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் இந்த பணியிடை நீக்க நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

சிபிசிஐடி பிரிவில் வெள்ளத்துரை மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உள்துறை நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.