Skip to main content

பத்திரமாக வச்சிருக்க சொன்ன முதலாளி; 30 லட்சத்துடன் பதுங்கிய தொழிலாளி - ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீஸ்

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 

The employer who told you to stay safe ... the worker who hid with 30 lakhs! Rajasthan police beat up !!

 

சேலம் அருகே, ஜவுளிக்டை அதிபர் ஒருவர் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி கொடுத்திருந்த 30 லட்சம் ரூபாயை சுருட்டிக் கொண்டு தலைமறைவான கடை மேலாளரை காவல்துறையினர் ராஜஸ்தானில் வைத்து கைது செய்தனர்.

 

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்பாராம். இவருடைய மகன் ஆனந்த் (வயது 28). சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேச்சேரி, ஜலகண்டாபுரம் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய இடங்களில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார். 

 

இவருடைய கடையில், கடந்த 7 ஆண்டுகளாக ஆனந்தின் பூர்வீக மாவட்டத்தைச் சேர்ந்த பவானிபால் சிங் (வயது 24) என்ற வாலிபர் மேலாளராக வேலை செய்து வந்தார். ஒரே ஊர்க்காரர், ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தன் குடும்ப உறுப்பினர் போலவே கருதி, சொந்த வீட்டிலேயே ஆனந்த் தங்க வைத்திருந்தார். 

 

கடந்த பிப்ரவரி மாதம், ராஜஸ்தானில் வசித்து வரும் ஆனந்தின் தந்தைக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரைப் பார்த்துவிட்டு வருவதற்காக ஆனந்த் ராஜஸ்தான் கிளம்பியிருக்கிறார். 

 

அப்போது தனது ஜவுளிக்கடைகளில் வியாபாரம் ஆனதன் மூலம் கிடைத்த 30 லட்சம் ரூபாயை மேலாளர் பவானிபால் சிங்கிடம் கொடுத்துவிட்டு, அத்தொகையை ஜவுளிகள் விநியோகம் செய்த நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், ஊர் திரும்பும் வரை பத்திரமாக வைத்திருக்கும்படியும் கூறிவிட்டுச் சென்றுள்ளார். 

 

ஜவுளிக்கடை அதிபரும் ஊரில் இல்லை; கையிலோ சுளையாக 30 லட்சம் ரூபாய் இருக்கிறது. பணத்தைப் பார்த்ததும் மதி மயங்கிய பவானிபால் சிங், பிப். 13ஆம் தேதியன்று ஜலகண்டாபுரம் வீட்டில் உள்ள சிசிடிவி கேராமக்களை அணைத்துவிட்டு, பணத்துடன் தலைமறைவாகிவிட்டார். 

 

சொந்த மாநிலத்திற்குச் சென்றிருந்த ஆனந்த், ஒரு வாரம் கழித்து ஊர் திரும்பினார். தன் மேலாளரும் காணவில்லை; பணத்தையும் காணவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ்விடம் புகார் அளித்தார். 

 

அவருடைய உத்தரவின்பேரில் இந்தப் புகாரை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர். விசாரணையில், பவானிபால் சிங் பணத்துடன் ராஜஸ்தான் மாநிலத்திற்கு தப்பிச்சென்றுவிட்டது தெரிய வந்தது. ராஜஸ்தான் பார்மர் மாவட்டம் ஜாலிபா கிராமத்தில் பதுங்கி இருந்த பவானிபால் சிங்கை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 22.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மீதப்பணத்தை அவர் செலவு செய்துவிட்டது தெரிய வந்தது. 

 

சேலம் அழைத்து வந்த பவானிபால் சிங்கை, வழக்கமான விசாரணை நடைமுறைகளுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவின்பேரில், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.