Skip to main content

பத்திரமாக வச்சிருக்க சொன்ன முதலாளி; 30 லட்சத்துடன் பதுங்கிய தொழிலாளி - ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீஸ்

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 

The employer who told you to stay safe ... the worker who hid with 30 lakhs! Rajasthan police beat up !!

 

சேலம் அருகே, ஜவுளிக்டை அதிபர் ஒருவர் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி கொடுத்திருந்த 30 லட்சம் ரூபாயை சுருட்டிக் கொண்டு தலைமறைவான கடை மேலாளரை காவல்துறையினர் ராஜஸ்தானில் வைத்து கைது செய்தனர்.

 

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்பாராம். இவருடைய மகன் ஆனந்த் (வயது 28). சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேச்சேரி, ஜலகண்டாபுரம் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய இடங்களில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார். 

 

இவருடைய கடையில், கடந்த 7 ஆண்டுகளாக ஆனந்தின் பூர்வீக மாவட்டத்தைச் சேர்ந்த பவானிபால் சிங் (வயது 24) என்ற வாலிபர் மேலாளராக வேலை செய்து வந்தார். ஒரே ஊர்க்காரர், ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தன் குடும்ப உறுப்பினர் போலவே கருதி, சொந்த வீட்டிலேயே ஆனந்த் தங்க வைத்திருந்தார். 

 

கடந்த பிப்ரவரி மாதம், ராஜஸ்தானில் வசித்து வரும் ஆனந்தின் தந்தைக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரைப் பார்த்துவிட்டு வருவதற்காக ஆனந்த் ராஜஸ்தான் கிளம்பியிருக்கிறார். 

 

அப்போது தனது ஜவுளிக்கடைகளில் வியாபாரம் ஆனதன் மூலம் கிடைத்த 30 லட்சம் ரூபாயை மேலாளர் பவானிபால் சிங்கிடம் கொடுத்துவிட்டு, அத்தொகையை ஜவுளிகள் விநியோகம் செய்த நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், ஊர் திரும்பும் வரை பத்திரமாக வைத்திருக்கும்படியும் கூறிவிட்டுச் சென்றுள்ளார். 

 

ஜவுளிக்கடை அதிபரும் ஊரில் இல்லை; கையிலோ சுளையாக 30 லட்சம் ரூபாய் இருக்கிறது. பணத்தைப் பார்த்ததும் மதி மயங்கிய பவானிபால் சிங், பிப். 13ஆம் தேதியன்று ஜலகண்டாபுரம் வீட்டில் உள்ள சிசிடிவி கேராமக்களை அணைத்துவிட்டு, பணத்துடன் தலைமறைவாகிவிட்டார். 

 

சொந்த மாநிலத்திற்குச் சென்றிருந்த ஆனந்த், ஒரு வாரம் கழித்து ஊர் திரும்பினார். தன் மேலாளரும் காணவில்லை; பணத்தையும் காணவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ்விடம் புகார் அளித்தார். 

 

அவருடைய உத்தரவின்பேரில் இந்தப் புகாரை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர். விசாரணையில், பவானிபால் சிங் பணத்துடன் ராஜஸ்தான் மாநிலத்திற்கு தப்பிச்சென்றுவிட்டது தெரிய வந்தது. ராஜஸ்தான் பார்மர் மாவட்டம் ஜாலிபா கிராமத்தில் பதுங்கி இருந்த பவானிபால் சிங்கை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 22.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மீதப்பணத்தை அவர் செலவு செய்துவிட்டது தெரிய வந்தது. 

 

சேலம் அழைத்து வந்த பவானிபால் சிங்கை, வழக்கமான விசாரணை நடைமுறைகளுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவின்பேரில், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.