Skip to main content

நெல் கொள்முதலில் மோசடியில் ஈடுபட்ட நிலைய ஊழியர் சஸ்பெண்ட்!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021
Employee suspended for fraud in paddy procurement

 

கடலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான அறுவடை பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், விவசாயிகள் விளைவித்த நெல் பொருட்களை விற்பனை செய்வதற்காக, மாவட்டம் முழுவதும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சி.கிரனூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால், சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டுவந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பொழிந்த கனமழையால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், மழை நீரில் அடித்தும் செல்லப்பட்டன. 

 

இதனால் தாங்கள் விளைவித்த நெல் வீணாகிப்போவதுடன் உரிய விலை கிடைக்காத வேதனையில் இருந்த விவசாயிகள், தங்கள் நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாததே இந்த அவலநிலைக்குக் காரணம் எனவும் குற்றஞ்சாட்டினர். அதையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் சி.கீரனூர் கிராமத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது விவசாயிகள், “4 நாட்கள் மட்டும்தான் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அதன் பின்பு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை” என புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் PC என சொல்லக்கூடிய நிலைய அதிகாரியை விசாரித்தபோது, பல்வேறு விதமான காரணங்களைச் சொல்லி மழுப்பினார்.

 

Employee suspended for fraud in paddy procurement

 

பின்னர் பூதாமூரில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் இருந்த 691 மூட்டைகளைக் கொள்முதல் செய்து அரசு குடோனுக்கு அனுப்பியது தெரியவந்தது. தனியார் வியாபாரியின் நெல்லை, சி.கீரனூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ததுபோல், போலி சான்றிதழ் அளித்து, அரசு குடோனுக்கு நெல் மூட்டைகளை அனுப்பிவைத்ததும் தெரியவந்தது. போலி சான்றிதழ் பெறுவதற்காக, கார்மாங்குடி கிராமத்தில் உள்ள விவசாயியின் பட்டாவையும், வல்லியத்தில் உள்ள விவசாயியின் சிட்டாவையும் பயன்படுத்தி, மருங்கூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் கையொப்பத்துடன் போலி சான்றிதழ் பெற்றுள்ளது தெரியவந்தது. மேலும், விவசாயிகளுக்காக அரசு கொடுத்த முத்திரை பதித்த 6000 சாக்குகளில் இருந்து, 600 சாக்குக்களைத் திருடி தனியார் வியாபாரிடம் கொடுத்ததும் தெரியவந்தது.

 

இதனை தெரிந்துகொண்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள், உடனடியாக நிலைய ஊழியர் பரமசிவத்தை சஸ்பெண்ட் செய்தனர். அவர் அரசு குடோனுக்கு கொண்டு சென்ற நெல் மூட்டைகள் பற்றியும், அதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் பற்றியும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.மேலும், போலி சான்றிதழ் அளித்த அரசு அதிகாரிகள் பற்றியும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதுபோல் கடலூர் மாவட்டம் முழுவதும் நடைபெறுவதாகவும், இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.