திருச்சி மாவட்டம், காந்தி மார்க்கெட் அருகே தாராநல்லூர் விஸ்வாஸ் நகரில் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் திருச்சி கோட்டை சஞ்சீவி நகரைச் சேர்ந்த குணசேகரன் (31), 10 ஆண்டுகளாக வேலை பார்த்துவந்தார். இவர், ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்று அங்குள்ள எந்திரங்களில் பணம் நிரப்பும் பணி செய்துவந்தார்.
இந்தநிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருச்சி மாவட்டம் புறத்தாக்குடியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மிஷினில் ரூ. 40 லட்சம் வரை நிரப்புவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவர், ஏ.டி.எம். மிஷினில் ரூ. 20 லட்சத்தை மட்டும் வைத்துவிட்டு மீதி ரூ. 20 லட்சத்தை மறைத்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் கடந்த மார்ச் மாதம் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மாநகரகுற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவுசெய்துகுணசேகரனை தேடிவந்தனர். அவர் சென்னை மதுரவாயல் பகுதியில் மீன்பாடி வண்டியில் டிரைவராக வேலை பார்த்துவந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.