இந்த நிலையில் தற்போது கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக கூடாது என்பதற்காக வங்கி கணக்கிலிருந்து யாருக்கும் இ.எம்.ஐ. தொகை பிடித்தம் செய்யக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் தர்மலிங்கத்தின் வங்கிக்கணக்கில் இருந்து கடந்த 2-ஆம் தேதியன்று 5500 ரூபாய் என இரண்டு மாதத்திற்கான இ.எம்.ஐ. தவணைத் தொகையாக 11 ஆயிரம் ரூபாயை வங்கி அதிகாரிகள் தர்மலிங்கத்தின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொண்டனர்.
பணம் பிடித்தம் செய்ததை அறிந்த தர்மலிங்கம் வங்கிக்குச் சென்று வங்கி அதிகாரிகளிடம் அரசு உத்தரவை மீறி பணத்தை பிடித்தம் செய்யலாமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் இன்னும் ஒரு வாரத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் சேர்த்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் இரண்டு வாரங்கள் கடந்தும் அவர் வங்கி கணக்கில் வங்கி ஊழியர்கள் பணத்தை கணக்கில் சேர்க்கவில்லை. இதுகுறித்து நேற்று மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி மேலாளரை சந்தித்து தர்மலிங்கம் கேட்டுள்ளார். அப்போது வங்கி மேலாளர் கோபமாக தர்மலிங்கத்திடம் இப்போது வங்கியில் பணமே இல்லை. அதனால் உங்கள் கணக்கில் பணத்தை சேர்க்க முடியாது என்று கோபமாக கூறியுள்ளார்.
இந்த பதிலைக் கேட்ட தர்மலிங்கம் கோபத்துடன் வங்கியை விட்டு வெளியே வந்தவர், வங்கியின் முன்பு தனிமனிதனாக அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் தர்ணா போராட்டம் நடத்திய தர்மலிங்கத்தை சந்தித்து விபரம் கேட்டனர். தர்மலிங்கத்தின் நியாயமான கோரிக்கையை புரிந்து கொண்ட போலீசார், இதுபற்றி வங்கி மேலாளரை சந்தித்து விசாரித்தனர்.