Skip to main content

புதுக்கோட்டையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்... குளங்களை சீரமைத்த இளைஞர் குழுவினர் கலெக்டரிடம் மனு!

Published on 27/06/2019 | Edited on 28/06/2019

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம், சேந்தன்குடி, குளமங்கலம், வடகாடு, மாங்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு சென்றுவிட்டது. அதனால் மேலும் நிலத்தடி நீர் கீழே சென்றுவிடாமல் நிலத்தடி நீரை பாதுகாக்கும் விதமாக கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு உள்ளிட்ட கிராமங்களில் இளைஞர்கள் சொந்த செலவில் நீர்நிலைகளையும், வரத்துவாய்க்கால்களையும் சீரமைத்து வருகின்றனர்.
 

pudukottai

கொத்தமங்கலத்தில் அம்புலி ஆறு அணைக்கட்டில் தொடங்கி கிராமத்தில் உள்ள முக்கிய குளங்கள், வரத்துவாய்க்கால்களை கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் தொடர்ந்து 47 வது நாளாக சீரமைத்து வருகின்றனர். 


இந்த நிலையில் கொத்தமங்கலத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும், வரத்து வாய்க்கால்களில் தனிநபர் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் தண்ணீர் வரத்து மற்றும் தண்ணீர் தேக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் நீர்நிலை மற்றும் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றித் தரவேண்டும் என்று குளங்களை சொந்த செலவில் சீரமைத்து வரும் இளைஞர் மன்றத்தினர் புதுக்கோட்டை மாவட்டக் கலெக்டர் உமாமகேஸ்வரியை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். மேலும் மேலும் குளங்களின் வரைபடங்கள், அதன் பரப்பளவுகள் பற்றிய விபரங்களை அறிய வருவாய் துறைக்கும் அதற்காண பணம் செலுத்தி உள்ளனர்.
 

கலெக்டரை சந்தித்த குழுவினர் கூறும் போது.. 

 

கொத்தமங்கலத்தில் முன்மாதியாக அனைத்து குளங்களையும் தூர்வாரி வருகிறோம். ஆனால் தனி நபர்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் எங்கள் குழுவினர் அதனை அகற்ற முடியாத நிலையில் இருந்தோம். இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை வந்த வருவாய்துறை நிர்வாக ஆணையர் சத்தியகோபால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டரிடமோ, வருவாய்துறையிடமோ மனு கொடுத்தால் உடனே அகற்றிக் கொடுக்கப்படும் என்று பேசினார். அதன் அடிப்படையில் தான் மாவட்டக் கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறோம். மனுவை படித்துப் பார்த்த கலெக்டர் எங்களை பாராட்டியதுடன் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். மேலும் இதே மனுவை வருவாய்துறை நிர்வாக ஆணையம் மற்றும் அமைச்சர்களுக்கும், எங்கள் குழுவினர் நேரில் சந்தித்து கொடுக்க இருக்கிறோம் என்றனர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினால் பருவமழை பெய்யும் போது நீர்நிலைகளில் தண்ணீரை தேக்கலாம் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.