Skip to main content

கேரட், பீட்ரூட் ருசிக்கு மயங்கிய யானைகள்; தொடர்ந்து முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை!

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Elephants enchanted by the taste of carrots and beetroot; Farmers are worried because they continue to camp!

 

சானமாவு வனப்பகுதியையொட்டிய விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்குகளை தின்று ருசி கண்ட மூன்று யானைகளால் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

கர்நாடகா மாநிலம், காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 200க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறி, தமிழக வனப்பகுதியான ஜவளகிரி வழியாக அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், ராயக்கோட்டை பகுதிகளில் ஊடுருவின. இவை பல்வேறு குழுக்களாக பிரிந்து முகாமிட்டு இருந்தன. 

 

விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்ததால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அனைத்து யானைகளும் தேன்கனிக்கோட்டை வழியாக மீண்டும் கர்நாடகா மாநிலம் பன்னேர்கட்டா வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. இவற்றில் 3 யானைகள் மட்டும் தமிழக வனப்பகுதியை விட்டுச் செல்லாமல் அடம் பிடித்து இங்கேயே முகாமிட்டுள்ளன. அவை இரவு நேரங்களில் சுற்றுவட்டார கிராமங்களில் விளைநிலங்களை நாசப்படுத்தி வருகின்றன. 

 

இந்நிலையில், மார்ச் 20ம் தேதி காலை, ஒற்றை யானை ஒன்று சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி உள்ளது. இதைப்பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று, ஒற்றை யானையை மீண்டும் சானமாவு வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

 

சானமாவு வனப்பகுதியில் தென்பெண்ணை ஆற்றங்கரை அருகில் கோபசந்திரம், சானமாவு, ராமாபுரம், காமன்தொட்டி உள்ளிட்ட கிராமங்களில் பூசணி, வெண்டை, கேரட், பீட்ரூட் ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இவற்றை நன்கு ருசி கண்ட யானைகள் இப்பகுதியை விட்டு வெளியேற மறுப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

 

தனித்தனியாக சுற்றித்திரியும் மூன்று யானைகளையும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு துரத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரம், யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.