Skip to main content

கேட்டில் பாய்ந்த மின்சாரம்... அடுத்தடுத்து உயிரிழந்த தம்பதி

Published on 06/11/2022 | Edited on 06/11/2022

 

 The electricity that flowed in the gate... the couple died in succession

 

சென்னை கோடம்பாக்கத்தில் இரும்பு கேட்டில் மின்சாரம் பாய்ந்த நிலையில், அதனைத் தொட்ட தம்பதி இருவர் மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மொத்தம் ஆறு வீடுகள் உள்ளது. தரைத்தளத்தில் உள்ள வீட்டில்  மூர்த்தி (78) என்பவர் அவரது மனைவி பானுமதி (73) ஆகியோர் வசித்து வந்தனர். மேல்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வந்தார். மீதமுள்ள நான்கு  வீடுகளில் யாரும் வசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் குடியிருப்பின் வெளிப்புற கேட்டை பூட்டுவதற்காக மூர்த்தி சென்றுள்ளார்.

 

அப்பொழுது கேட்டின் மீது பொருத்தப்பட்டிருந்த அலங்கார மின்விளக்கிற்கு செல்லக்கூடிய வயரில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் இரும்பு கேட்டிலும் பாய்ந்தது.  இதனை அறியாமல் கேட்டை தொட்ட மூர்த்தி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.  நீண்ட நேரமாகியும் கேட்டை பூட்ட சென்ற கணவர் வராதால் அவரை தேடிக்கொண்டு மனைவி பானுமதி வந்துள்ளார். அப்பொழுது கேட்டில் தொங்கியபடி இருந்த கணவரை காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் அசோக் நகர் காவல் நிலையத்திற்கு தகவலளித்த நிலையில் மின்வாரிய அதிகாரிகளுடன் வந்த போலீசார், மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு இருவரது சடலத்தையும் மீட்டனர். அதனைத் தொடர்ந்து உடல்கள் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.