Skip to main content

சாலை விபத்தில் பலியான மின்சார வாரிய ஊழியர்!

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

Electricity Board employee passed away in road accident

 

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மையப் பகுதியில் உள்ளது உளுந்தூர்பேட்டை. அங்கிருந்து விருத்தாசலம் செல்லும் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் குறுக்கே உள்ள பாலங்களை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் புதிதாக வாகனங்களில் பயணம் செய்வோர் பெரும் விபத்துக்குள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் திருத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம் என்பவரது மகன் தாஸ். இவர் மின்சார வாரியத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

 

இவர் நேற்று செங்கல்பட்டிலிருந்து விருத்தாசலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையில் அவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை அகலப்படுத்தும் பணிக்காக போடப்பட்டிருந்த தரைப்பாலத்தின் பள்ளத்தில் தனது இருசக்கர வாகனத்தோடு நிலைதடுமாறி விழுந்துள்ளார். அங்கு பாலம் கட்டுமானப் பணிக்காக அரைகுறையாக கட்டப்பட்டு நீண்டு கொண்டிருந்த கம்பிகள் அவரது உடலில் பல்வேறு இடங்களில் குத்தி உடலினுள்ளே சென்றுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே தாஸ் துடிதுடித்து இறந்தார். அந்த சாலை வழியே வாகனத்தில் சென்றவர்கள் இந்த விபத்தை பார்த்து விட்டு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளனர்.

 

இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலம் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் போதிய விழிப்புணர்வு பலகைகள் விபத்து தடுப்பு ஒளிரும் ஸ்டிக்கர்கள் உட்பட விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் முறையாக எடுக்காததால் மின்சார வாரிய ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழக்க நேர்ந்துள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.