சிவகங்கை அருகே மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கீழையூர் காலனியில் மின்சாரம் தாக்கி குழந்தை (வயது 40), ஞானமுத்து (வயது 23) என்று இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மின்சாரம் தாக்கி காயமடைந்த ஆறுமுகம், அவயன் ஆகியோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாட ஆதரவாளர்கள் ஏற்பாடுசெய்து வருகின்றனர். இந்நிலையில், அவரது பிறந்த நாளுக்காகக் கொடி நட முயன்றபோது, மின்கம்பியில் கொடிக்கம்பம் உரசியதில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.